ரேஷன் கடைக்கு வர முடியாதவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு எப்போது? கோவை கலெக்டர் தகவல்
கோவை: கோவை மாவட்டத்தில் 11 லட்சத்து 12 ஆயிரத்து 635 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் டோக்கனில் குறிப்பிட்ட தேதியில் ரேஷன் கடைக்கு வர முடியாதவர்களுக்கு 13-ந் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று கோவை கலெக்டர் கிராந்திகுமார் அறிவித்துள்ளார்.
தமிழக அரசு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 2.21 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்துள்ளது. கிலோ பச்சரிசிக்கு 35.20 ரூபாய், சர்க்கரைக்கு 42.84 ரூபாய், கரும்புக்கு 35 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டு, மொத்தம் 249.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் தமிழகம் முழுவதும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் மட்டும் 11 லட்சத்து 12 ஆயிரத்து 635 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு முழுக்கரும்பு ஆகியவை அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
அதன்படி கோவை மாவட்டத்தில் 11 லட்சத்து 11 ஆயிரத்து 543 அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கும், இலங்கை அகதிகள் முகாமில் உள்ள 1,092 நபர்களுக்கும் என மொத்தம் 11 லட்சத்து 12 ஆயிரத்து 635 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தேவையான பச்சரிசி, சர்க்கரை ஆகியவை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு முழுமையாக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. மேலும் கோவை மாவட்டத்துக்கு 9 லட்சத்து 21 ஆயிரத்து 188 சேலைகள், 9 லட்சத்து 20 ஆயிரத்து 73 வேட்டிகள் என மொத்தம் 18 லட்சத்து 41 ஆயிரத்து 261 வேட்டி-சேலைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
எனவே ரேஷன் கார்டுதாரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி, நேரத்தில் ரேஷன் கடைக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்று செல்ல வேண்டும். டோக்கனில் குறிப்பிட்ட தேதியில் வாங்க முடியாதவர்கள் வருகிற 13-ந் தேதி பெற்று கொள்ளலாம்" இவ்வாறு கோவை கலெக்டர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications