பிரதமர் மோடி எங்கு போனாலும் என்னைப்பற்றி தான் பேசுகிறார்.. என்ன சொல்கிறார் தெரியுமா? விளாசிய உதயநிதி
கோவை: பிரதமர் மோடி எங்கு போனாலும் என்னைப்பற்றித்தான் பேசுகிறார் என்றும் நான் சொல்லாததை எல்லாம் சொல்லியதாக கூறி வதந்தி பரப்புகிறார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
திமுக இளைஞர் அணி மாநாடு சேலத்தில் வரும் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை செய்யும் விதமாக கோவை மாவட்ட திமுக இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம் கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். இதில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
வருகிற 17 ஆம் தேதி மநாடு நடைபெறுகிறது. குடும்பத்தோடு வந்து இந்த மாநாட்டை வெற்றி மாநாடாக நடத்தி காட்ட வேண்டும். திமுக இளைஞர் அணி கூட்டம் மற்ற இயக்கங்களை போல கிடையாது. எதோ கூடுனோம். கைத்தட்டினோம். விசில் அடித்தோம் என்பது கிடையாது. இளைஞர் அணி கூட்டம் என்பது திமுகவின் கொள்கை கூட்டமாக இருக்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு முன்பு மதுரையில் ஒரு மாநாடு நடைபெற்றது. யாரு என்று சொல்ல தேவையில்லை.

கேலிக்கூத்து மாநாடு: அது உங்களுக்கே தெரியும். அந்த மாநாடு எதற்காக நடத்தப்பட்டது என்று நடத்தியவர்களுக்கும் தெரியாது. கலந்து கொண்டவர்களுக்கும் தெரியாது. மாநாட்டில் ஆடல் பாடல் நிகழ்ச்சி, மிமிக்ரி தான் நடைபெற்றது. கேலிக்கூத்தாக மதுரையில் மாநாடு நடத்தினார்கள். ஒரு மாநாடு எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக அந்த மாநாடு நடைபெற்றது.
ஆனால், சேலத்தில் நடைபெறும் மாநாடு இந்தியாவிலேயெ ஒரு மாநாடு இவ்வளவு எழுச்சியோடு நடைபெற்றது என்பதை நிரூபிக்கும் வகையில் அந்த மாநாட்டை நடத்தி காட்ட வேண்டும். கிராமங்களில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் நன்றாக படித்து மருத்துவராக ஆக வேண்டும் என்பதற்காக நுழைவுத்தேர்வை கருணாநிதி ரத்து செய்தார். ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்தில் நீட்தேர்வு வரவில்லை.
60 லட்சம் கையெழுத்துக்கள்: அவர் இறந்த பிறகு பா.ஜனதாவின் வற்புறுத்தலால் தான் நீட் தேர்வை கொண்டு வந்தனர். நீட் தேர்வு வந்ததில் இருந்து அனிதா உள்பட 22 மாணவ-மாணவிகள் உயிரிழந்து உள்ளனர். அனிதா உயிருடன் இருந்து இருந்தால் மருத்துவர் ஆகி இருப்பார். இந்த ஆண்டு சென்னையில ஜெகதீஷ் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டார். அவரின் தந்தையும் மறுநாளே துக்கம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார்.
எனவேதான் நீட் தேர்வு வேண்டாம் என கையெழுத்து இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாக 44 லட்சம் கையெழுத்துக்களை பெற்று இருக்கிறோம். 50 லட்சம் இலக்கு என்று ஆரம்பித்து 60 லட்சம் கையெழுத்து பெற்றுள்ளோம். நீட் தேர்வை தமிழ்நாட்டில் இருந்து என்றைக்கு முழுமையாக ரத்து செய்கிறமோ அன்றுதான் முழுமையான வெற்றி. புதிய கல்விக்கொள்கையில் 8-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்று கூறுகிறார்கள்.
9 லட்சம் கோடி: 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேவையா? இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கிறார். தமிழ்நாட்டில் பொருளாதார உரிமை பறிக்கப்பட்டு உள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு ரூ.5 லட்சம் கோடி வரியை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்துக்கு மத்திய அரசு கொடுத்தது வெறும் ரூ.2 லட்சம் கோடி. ஆனால் உத்தரபிரதேச மாநிலத்திற்கு ரூ.9 லட்சம் கோடி வரை வழங்கி உள்ளது.
மோடி என்னைப்பற்றி பேசுகிறார்: நமது மாநில உரிமைகளை கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் பறிகொடுத்து இருக்கிறோம். இதனால் தான் சேலத்தில் உரிமை மீட்பு மாநாடு நடத்த உள்ளோம். பிரமர் மோடி எங்கு சென்றாலும் என்னைப்பற்றி தான் பேசுகிறார். கடந்த வாரம் ராஜஸ்தானில் என்னைப்பற்றி பேசுகிறார். என்ன பேசுகிறார் என்றால்.. நான் பேசாததை எல்லாம் பேசியதாக சொல்லி வதந்தியாக பரப்புகிறார். நான் ஒரு மாநாட்டில் கலந்து கொண்டு என்ன பேசினேன் என்றால் பிறப்பால் அனைவரும் சமம்.
சமுதாயத்தில் எந்த விதமான ஏற்றத்தாழ்வுகளும் இருக்கக் கூடாது. அது அழிக்கப்பட வேண்டும் என்றுதான் நான் பேசினேன். ஆனால், அதை நான் இனப்படுகொலைக்கு தூண்டினேன் என சொல்லி பூதாகரமாக்கி ஒட்டு மொத்த இந்தியாவும் என்னைப்பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள். இப்போ வழக்கு உள்ளது. நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்கனும் என்றார்கள்.. மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது நான் சொன்னது சரிதான் நான் கலைஞர் பேரன்.. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications