கோவை மாநகராட்சியின் அடுத்த மேயர் இவர்தானா? ரேஸில் யார் யார்? முடிவு உதயநிதி ஸ்டாலின் கையில்!
கோவை: கோவை மாநகராட்சி மேயராக இருந்த கல்பனா தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய மேயராக தேர்வு செய்யப்படப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அடுத்த மேயர் ரேஸில் 4 பேர் உள்ளனர்.
கோயம்புத்தூர், திருநெல்வேலி ஆகிய மாநகராட்சிகளின் திமுக மேயர்கள் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் 96 வார்டுகளை கைப்பற்றின. அப்போது கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி 19 வது வார்டு உறுப்பினர் கல்பனா ஆனந்தகுமாரை மேயராக பரிந்துரை செய்ததன் பேரில் திமுக தலைமை அவரை மேயர் வேட்பாளராக அறிவித்தது. அதைத் தொடர்ந்து கல்பனா ஆனந்தகுமார் மேயராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
கோவை மேயர் கல்பனா ராஜினாமா: மேயர் கல்பனா, திமுக மாமன்ற உறுப்பினர்களிடையே மோதல் போக்கை கடைப்பிடித்து வந்ததாலும், கோவை மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டல தலைவர்களுடனும் மோதல் போக்கை கடைபிடித்து வந்ததாலும் அவர் மீது திமுக தலைமைக்கு அடுத்தடுத்து புகார்கள் சென்றன.
மேலும், மாநகராட்சியில் விடப்படும் டெண்டர்கள் தொடர்பாக மூத்த அமைச்சர் கே என் நேருவுடனும் முட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தலைமைக்கு தொடர்ச்சியாக புகார்கள் சென்றதைத் தொடர்ந்து அவரை மாற்ற தலைமை முடிவு செய்தது. இந்நிலையில் தான் திமுக தலைமையின் அறிவுறுத்தலை தொடர்ந்து, தனது மேயர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் கல்பனா.
நெல்லை மேயர் ராஜினாமா: கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமாரின் ராஜினாமாவை தொடர்ந்து நெல்லை மேயர் சரவணனும் இன்று ராஜினாமா செய்துள்ளார். இவர் தனது ராஜினாமா கடிதத்தை நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பினார். நெல்லை மாநகராட்சியில் சில மாதங்களாக மேயர் சரவணன் திமுக கவுன்சிலர்கள் இடையே கடுமையான மோதல்கள் இருந்து வந்தன.
நெல்லை, கோவை மேயர்கள் மீது தலைமைக்கு வந்த தொடர் புகார்களின் அடிப்படையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு விசாரணை நடத்தினார். அமைச்சரின் விசாரணையை தொடர்ந்து கட்சி் மேலிட அறிவுறுத்தலின்படி மேயர்கள் இருவரும் ராஜினாமா என தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய மேயர் யார்?: இந்நிலையில், கோவை மாநகராட்சியின் அடுத்த மேயராக வரப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கோவை மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், மேயர் பதவிக்கு தற்போது மத்திய மண்டல தலைவராக உள்ள மீனா லோகு, கிழக்கு மண்டல தலைவராக உள்ள இலக்குமி இளஞ்செல்வி, மேற்கு மண்டல தலைவராக உள்ள தெய்வானை தமிழ்மறை ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன.
2022 சமயத்தில் திமுக மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக்கின் மனைவி இலக்குமி இளஞ்செல்வி, கோவை புறநகர் கிழக்கு மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதியின் மகள் நிவேதிதா, 46வது வார்டு கவுன்சிலர் மீனா லோகு ஆகியோர் மேயர் பதவிக்கான ரேஸில் இருந்தனர். அவர்களில் இலக்குமி இளஞ்செல்வி, மீனா லோகு ஆகியோர் இப்போது மேயர் பதவி பெற முட்டி மோதுவதாகத் தெரிகிறது.
மேயர் ரேஸில் முந்துவது யார்?: கோவை மாநகர் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளரான தனபாலின் மனைவியும், கோவை மாநகராட்சி 27 ஆவது வார்டு கவுன்சிலருமான அம்பிகா தனபால் மேயராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
அம்பிகாவின் கணவர் தனபால் இளைஞரணி பொறுப்பில் இருப்பதால், உதயநிதியின் டிக் அந்தப் பக்கம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும், மாநகர் மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக், அமைச்சர்கள் மற்றும் திமுக தலைமையுடன் நெருக்கம் காட்டுவதால், இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் மேயராகவும் வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் கோவை திமுகவினர்.












Click it and Unblock the Notifications