கோவை கார் வெடிப்பு.. முதல்வர் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? அர்ஜூன் சம்பத் கேட்ட கேள்வி!
கோவை: கோவை கார் வெடிப்பு சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன் என்று இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே ஞாயிறு அதிகாலை காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேசா முபீன் என்பவர் உயிரிழந்தார். இது தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு என்ஐஏ அதிகாரிகளால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே தமிழக காவல்துறை மெத்தனமாக செயல்பட்டதாக தமிழக பாஜக குற்றம்சாட்டி வருகிறது.

இந்து மக்கள் கட்சி
இந்த நிலையில் கோவை சங்கமேஸ்வரர் கோவில் அருளால் தான் கோவை காப்பாற்றப்பட்டிருப்பதாக கூறி, அதற்கு நன்றி சொல்லும் வகையில் இந்து மக்கள் கட்சியினர் கோட்டை சங்கமேஷ்வரரை வழிபாடு செய்தனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து அர்ஜீன் சம்பத் கூறுகையில், இந்த கார் குண்டு வெடிவிபத்து இங்கு நடக்கவில்லை என்றால், பெரியளவில் இழப்பு ஏற்பட்டிருக்கும். அதை நினைத்தாலே நெஞ்சம் நடுங்குகிறது.

அரசியல்வாதிகள் வரவில்லை
இந்த விபத்திற்கு இதுவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்கவில்லை. அதேபோல் திமுக கூட்டணி கட்சிகள் மெளனம் காக்கின்றனர் . பாஜக மட்டுமே இந்த சம்பவத்தை கண்டித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சம்பவ இடத்திற்கு எந்த அரசியல்வாதியும் வரவில்லை. இதே மற்ற மதத்தினர் வழிபாட்டு தளம் அருகே இதுபோன்ற விபத்து ஏற்பட்டு இருந்தால் அனைத்து கட்சியினரும் கண்டனம் தெரிவித்திருப்பார்கள் என்று தெரிவித்தார்.

திமுக கூட்டு
திமுக இஸ்லாமிய மத அடிப்படை வாதிகளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு இந்து விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. இந்து பெண்களையும், கடவுள்களையும் இழிவுபடுத்தும் ஆ.ராசா போன்றவர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டிக்கவில்லை. இந்த ஆட்சி பயங்கரவாதிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பாதுகாப்பு அளித்து வருவதாக குற்றம் சாட்டினார்.

ஆர்ப்பாட்டம் இடமாற்றம்
தொடர்ந்து, அல் உம்மா தீவிரவாதிகள் வெளியே வருவதற்கும், அவர்களுக்கான வளர்ச்சி திட்டங்களை இந்த அரசு செயல்படுத்துகிறது. திமுக ஆட்சிக்கு வந்தாலே தீவிரவாதிகள் ஆக்கமும் ஊக்கமும் பெற்றுவிடுகிறார்கள். இந்து மக்கள் கட்சியின் சார்பாக தமிழக அரசை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டத்தை கோவில் முன்பு நடத்துவதாக இருந்தது. தற்போது என்ஐஏ விசாரணை நடைபெறுவதால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications