ஈஷாவில் திமுக அமைச்சர்.. குடியரசுத் தலைவருடன் மனோ தங்கராஜ் சிவராத்திரி சென்றது ஏன்? ராஜீவ் விளக்கம்
கோவை ஈஷா யோகா மைய மகா சிவராத்திரி விழாவில் தமிழ்நாடு அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டதை சுட்டிக்காட்டி பலர் விமர்சித்து வரும் நிலையில் அது குறித்த காரணத்தை திமுக விளக்கி உள்ளது.
கோவை: ஜக்கி வாசுதேவின் கோவை ஈஷா யோகா மையத்தில் நேற்றிரவு நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் தமிழ்நாடு அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்ட புகைப்படங்களை சுட்டிக்காட்டி பலர் விமர்சங்களை தெரிவித்து வரும் நிலையில் அதில் பங்கேற்றதற்கான காரணத்தை வெளியிட்டு இருக்கிறார் திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி.
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் அமைந்து இருக்கிறது. இந்த மையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என ஏராளமானோர் சென்று வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் நேற்று சிவராத்திரையை முன்னிட்டு விடிய விடிய இசை, கலை நிகழ்ச்சிகளுடன் சிவராத்திரி விழா நடைபெற்றது. இதேபோல் மகா சிவராத்திரி நிகழ்ச்சி கோவை ஈஷா மையத்திலும் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

ஈஷாவில் விடிய விடிய சிவராத்திரி
ஆண்டுதோறும் இதில் நடிகர், நடிகைகள், விளையாட்டு பிரபலங்கள், மூத்த அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், ஆன்மீகவாதிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் பங்கேற்று வருகின்றார்கள். இதில் ஜக்கி வாசுதேவின் நடனம் மிகவும் பிரபலம். அந்த வகையில் ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா நேற்றும் கோலாகளமாக நடைபெற்றது.

திரௌபதி முர்மு
இதில் சிறப்பு அழைப்பாளராக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டார். கோவையில் அவரது வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. அவருடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த நிர்வாகிகள், நடிகைகள் உள்ளிட்ட பலர் பங்கேற்று பூஜையில் ஈடுபட்டனர்.

அமைச்சர் மனோ தங்கராஜ்
ஏராளமானோர் ஜக்கி வாசுதேவுடன் சேர்ந்து நடனமாடி கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டனர். ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற இந்த மகா சிவராத்திரி விழா பல முன்னணி செய்தி ஊடகங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிலையில் ஈஷா யோகா மையத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்ட புகைப்படத்தை வெளியிட்டு பலர் விமர்சித்து வருகிறார்கள்.

கடும் விமர்சனம்
ஈஷா யோகா மையத்திற்கும், ஜக்கி வாசுதேவுக்கும் திமுகவினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஜக்கி வாசுதேவை கடந்த ஆண்டு விமர்சித்து இருந்தார். இந்த நிலையில் திமுகவை சேர்ந்த தமிழ்நாடு அமைச்சரே இதில் பங்கேற்கலாமா என கேள்வி எழுப்பினார்கள்.

ராஜீவ் காந்தி கேள்வி
மனோ தங்கராஜ் திமுக கொள்கையை மீறி அதில் பங்கேற்றதாக பல குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில் இது குறித்து திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி விளக்கம் கொடுத்து உள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளதாவது, "கன்னியாகுமரியில் கோவில் வடத்தேரை இழுக்காதீர் என அமைச்சர் அண்ணன் மனோ தங்கராஜை இழிவுபடுத்த பார்த்தது பாஜக.

பங்கேற்றது ஏன்?
நாட்டின் குடியரசு தலைவர் ஒரு மாநிலத்திற்கு வந்தால் மாநிலத்தின் பிரதிநிதி வரவேற்று உடன் இருக்க வேண்டும் என்பது கட்டாய மரபு. எந்த அமைச்சரை மதமாய் பார்த்து தடுக்க நினைத்தார்களோ அந்த அமைச்சரையே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள்ளும், ஈசாவிற்குள்ளும் குடியரசு தலைவரை அழைத்துச்சென்று உடனிருக்க வைத்து இருக்கிறார் எங்களின் திராவிட அரசன் முதலமைச்சர்." என்றார்.












Click it and Unblock the Notifications