அண்ணாமலைக்காக அதிமுகவிடம் ராஜ்ய சபா சீட் கேட்பீர்களா? சூசகமாக பதிலளித்த நயினார் நாகேந்திரன்
கோவை: அண்ணாமலைக்காக அதிமுகவிடம் மாநிலங்களவை தேர்தலில் சீட் கேட்பீர்களா என்ற கேள்விக்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார். பாஜகவிடம் 4 எம்எல்ஏ-க்கள் இருப்பதாக கூறிய நயினார் நாகேந்திரன், மாநிலங்களவை தேர்தலில் பாஜக தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்றும், அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பதால் அவர்களுக்கு ஆதரவு அளிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து ராஜ்ய சபாவிற்கு தேர்வு செய்யப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், வரும் ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ராஜ்ய சபாவில் பாமகவின் அன்புமணி ராமதாஸ், திமுகவின் எம்.சண்முகம், முகமது அப்துல்லா. பி.வில்சன், அதிமுகவின் என்.சந்திரசேகரன், மதிமுகவின் வைகோ ஆகியோரின் பதவிக் காலம் ஜூன் 24ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.

ஜூன் 9ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் என்றும், வேட்புமனுவைத் திரும்பப் பெற ஜூன் 12ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எம்.சண்முகம், பி.வில்சன், மதிமுகவின் வைகோ ஆகியோருக்கு திமுக தரப்பில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ராஜ்ய சபா செல்வது உறுதியாகி இருக்கிறது.
இதனால் அதிமுக தரப்பில் யாருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்பதே எதிர்பார்ப்பாக இருக்கிறது. மீண்டும் அன்புமணி ராமதாஸ்-க்கு வாய்ப்பு அளிக்கப்படுமா அல்லது பாஜக தரப்பில் அண்ணாமலைக்காக கேட்கப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் அண்ணாமலைக்காக அதிமுகவிடம் பேசப்படுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு நயினார் நாகேந்திரன், டாஸ்மாக் நிறுவன முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அதேபோல் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருக்கும் ரத்தீஷ் மற்றும் ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோர் லண்டனுக்கு சென்றுவிட்டதாக சொல்கிறார்கள். இதுகுறித்து அவர்கள் பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, ராஜ்ய சபா தேர்தல் தொடர்பாக என்னால் எந்த பதிலும் அளிக்க முடியாது. எங்களிடம் 4 எம்எல்ஏ-க்கள் இருக்கிறார்கள். அதனால் பாஜக தலைமை என்ன சொல்கிறார்களோ, அதனை பின்பற்றுவோம். தற்போது அதிமுக உடன் கூட்டணியில் இருக்கிறோம். அதனால் அதிமுகவுக்கு ஆதரவு கொடுக்க வேண்டுமென்றால், நிச்சயம் ஆதரவு அளிப்போம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications