இதுதான் புதிய இந்தியா.. ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்.. பெண்கள் சிறந்து விளங்குவதாக பாராட்டு
மாணவிகள் அதிகளவில் பட்டம் பெறுவதை பார்க்கும்போது இதுதான் புதிய இந்தியா என தோன்றுகிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
கோவை: பெண்கள் பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கி வருகிறார்கள். மாணவிகள் அதிகளவில் பட்டம் பெறுவதை பார்க்கும்போது இதுதான் புதிய இந்தியா என தோன்றுகிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இரண்டு நாள் பயணமாக நேற்று மதியம் கோவை வந்தார். ஆளுநர் வருகையை ஒட்டி விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
கோவை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.

பாலக்காட்டில் தமிழ்நாடு கவர்னர்
விமான நிலையத்தில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார். அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி கேரள மாநிலம் பாலக்காட்டு புறப்பட்டு சென்றார். பாலக்காட்டில் உள்ள தனது நண்பரை சந்திப்பதற்காக ஆளுநர் காரில் சென்றதால் கோவை பாலக்காடு சாலையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பாலக்காடு பயணத்தை முடித்துக்கொண்டு இரவே ஆளுநர் ஆர்.என்.ரவி கோவை திரும்பினார்.

உதவிகளை வழங்குவது போல
கோவையில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்தில் இரவு ஓய்வு எடுத்த ஆளுநர் இன்று கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். விழாவில் மாணவ - மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். இதன்பிறகு பட்டமளிப்பு விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாவது:- இலங்கைக்கு பொருளாதார உதவிகளை வழங்குவது போல வலை விரித்து அந்த நாட்டில் உள்ள இடங்களை எல்லாம் சீனா கைப்பற்றி வருகிறது. சீனாவின் இந்த வளர்ச்சியானது பதற்றத்தை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது.

முதலாம் உலகப் போருக்கு பிறகு
உலக நாடுகள் இந்தியாவை மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்த்து வருகின்றன. சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா இருக்கிறது. செல்போன் தயாரிப்பில் இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது. பல்வேறு துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்கி வருகின்றனர். மாணவிகள் அதிக அளவில் பட்டம் பெறுவதை பார்க்கும் போது இதுதான் புதிய இந்தியா என தோன்றுகிறது. முதலாம் உலகப் போருக்கு பிறகு இந்திய தலைவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது என்னவென்றால் இந்தியர்களை கல்வி அறிவு மிக்கவர்களாக ஆக்குவதுதான்.

ஒரே குடும்பமாக பார்க்கிறது
இதன் அடிப்படையில்தான் கல்வி நிறுவனங்கள் உருவானது. கல்வி அறிவு மட்டும் இல்லாமல் நாட்டுப்பற்றையும் விதைக்க கல்வி நிறுவனங்கள் தேவைப்பட்டன. இந்திய கல்வி முறை என்பது தனித்துவமான பண்புகளை கொண்டதாகும். இந்த தனித்துவம்தான் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு உதவுவதுடன் சிறந்த பங்களிப்பையும் ஆற்றுவதாக உள்ளது. மத்திய அரசு இந்த நாட்டை ஒரே குடும்பமாக பார்க்கிறது" என்றார்.












Click it and Unblock the Notifications