வீடு வீடாக ஏறுங்கள்..பாஜக வெற்றிக்காக வெறித்தனமாக வேலை செய்யுங்கள்..அண்ணாமலை டார்கெட்
கோவை: இன்றிலிருந்து லோக்சபா தேர்தல் வேலை நமக்கு ஆரம்பித்துவிட்டது. வெற்றிக்காக இரவு பகல் பார்க்காமல் உழைக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். வெற்றி தோல்வியைத் தாண்டி உழைப்பைப் போடுங்கள். கூட்டணியில் இருக்கிறோம், கூட்டணியில் இல்லை, தனியாக போட்டி போடுகிறோம், போட்டி போட்டும் வெற்றி பெறவில்லை என்பது போன்ற எண்ணங்களை தூக்கிப்போட்டுவிட்டு உழையுங்கள் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
பாஜக லட்சியம்: தமிழகத்தில் தாமரையை மலர வைக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு செயல்பட்டு வருகிறார் மாநிலத்தலைவர் அண்ணாமலை. லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுகள் உள்ள நிலையில் நிர்வாகிகளை சந்தித்து அவ்வப்போது பேசி வருகிறார். நேற்று கோவையில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் பேசிய அண்ணாமலை "தமிழ் மக்கள் மீது அதிகளவில் பிரதமர் அன்பு வைத்துள்ளார். ஜனநாயகத்தின் தலைவராக பிரதமர் இருக்கிறார். ஒன்பது ஆண்டை கடந்து 10வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.

லோக்சபா தேர்தல்: இன்னும் 5 ஆண்டு காலம் அவரை பிரதமராக ஆக்க வேண்டும். தேனிக்களை போல் சுறுசுறுப்பாக பணி செய்ய வேண்டும். தமிழகத்தில் இருந்து எத்தனை எம்பிக்களை அனுப்பப் போகிறோம் என்பதை திட்டமிட வேண்டும். இந்தியாவை அடிப்படையில் இருந்து மாற்றியுள்ளார் பிரதமர். இன்னொரு பாதையில் அழைத்துச் சென்றுள்ளார். குடிமக்களை பாதுகாப்பது மன்னனின் முதல் பணி. அதை தான் பிரதமர் செய்து வருகிறார்.
தமிழ்நாடு: மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக நாம் மாறப் போகிறோம். அதற்கான அடிப்படை பணியை பிரதமர் செய்து வருகிறார். சீனாவும் இந்தியாவும் தான் வருங்காலத்தில் மாறி மாறி பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாக இருக்கும். 350 ஆண்டுகளுக்கு பிறகு பொருளாதாரத்தில் முன்னேறும் நாடாக நாம் உள்ளோம். இந்தியாவின் பொருளாதரம் உயர உயர தமிழ்நாட்டின் பொருளாதாரம் குறைகிறது. மற்ற மாநிலங்கள் முன்னேறி வருகிறது. திராவிட அரசின் 30 சதவீதம் கமிஷனால்தான் தமிழ்நாடு பின்னோக்கிச் செல்கிறது.
மோடியின் சாதனை: மே 30 முதல் ஜுன் 30 வரைக்கும் பிரதமரின் நலத்திட்டங்களை பெரிய இயக்கமாக மக்களிடம் எடுத்து செல்கிறோம். பாஜக ஆட்சிக்கு வந்தபோது 18 ஆயிரம் கிராமங்களில் இந்தியாவில் மின்சாரம் இல்லை. ஆனால் இப்போது மின்சாரம் இல்லாத கிராமமே கிடையாது. இப்போது நம்முடைய நாடு 100 சதவீதம் மின்சாரம் நிறைந்த நாடாக உள்ளது. உள் நாட்டு அச்சுறுத்தல், அண்டை நாட்டு அச்சுறுத்தல் அனைத்தும் எதிர்கொண்டு வருபவர் பிரதமர். நாம் இப்போது மிக அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம். ஜம்மு காஷ்மீருக்கு ஒரு கோடி பேர் சுற்றுலா பயணம் செய்துள்ளார். நக்சல் முழுமையாக ஒழிப்பு. பிஎஃப்ஐ உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்கள் தடை செய்யப்பட்டது என தைரியமான நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஜல்லிக்கட்டு: பாஜக ஆட்சியில் ஒவ்வொரு மனிதரும் மாறியுள்ளனர். வாழ்க்கையில் உயர்ந்துள்ளனர். உலக அளவில் இந்தியாவின் பெருமை இந்திய குடிமக்களுக்கு பெற்றுத் தந்தவர் பிரதமர். ஜல்லிக்கட்டுப் போட்டியை தடை செய்தது காங்கிரஸ். பிரதமர் மோடி தலையிட்டு குழு அமைத்து உச்சநீதிமன்றத்தில் வாதிட்டனர். ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் கலாச்சாரம், பண்பாடு. காசி தமிழ் சங்கம் நடத்தினார்.
புதுமை பெண்கள்: நாடு முழுவதும் இலவசமாக கழிப்பிடம் கட்டி கொடுத்துள்ளோம். காமராஜர் எண்ணத்தின்படி கடைசி வீடு வரைக்கும் தண்ணீர் கொண்டு செல்வதை பிரதமர் குறிக்கோளாக வைத்து செயல்பட்டவர். 65 சதவீதம் வீட்டுக்கு குடிநீர் செல்லும் திட்டத்தை செய்துள்ளோம். வெளிப்படையாக வளர்ச்சிப் பணியை செய்து வருகிறோம். பிரதமர் மோடிதான் புதுமைப் பெண்களை உருவாக்கி வருகிறார்.
வீர வசனம்: திராவிட மாடல் அரசைப் போல் வீர வசனம் பேசுவதில்லை. கோவையில் சிலிண்டர், வெடிகுண்டு கலாச்சாரம், துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கி உள்ளது. எப்போது கொலை நடக்கும், கலவரம் நடக்கும் என்ற அச்சம் தமிழ்நாட்டில் உள்ளது. பாஜக ஆட்சிக்கு வரும்போது 63 சதவீதம்தான் எல்.பி.ஜி சிலிண்டர் இருந்தது. ஆனால் தற்போது 99.9 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. சுத்தம், சுகாதாரம், வீடு அனைத்தும் பிரதமரின் ஆட்சியில் உயர்ந்துள்ளது.
டார்கெட்: 2024 என்பது பலப்பரீட்சை. எல்லா தீய சக்திகளும் ஒரு அணியில் திரண்டுள்ளனர். நாம் வீடுவீடாக ஏற வேண்டும், மக்களை சந்திக்க வேண்டும். இன்றிலிருந்து லோக்சபா தேர்தல் வேலை நமக்கு ஆரம்பித்துவிட்டது. வெற்றி தோல்வியைத் தாண்டி உழைப்பைப் போடுங்கள். கூட்டணியில் இருக்கிறோம், கூட்டணியில் இல்லை, தனியாக போட்டி போடுகிறோம், போட்டி போட்டும் வெற்றி பெறவில்லை என்பது போன்ற எண்ணங்களை தூக்கிப்போட்டுவிட்டு உழையுங்கள். எந்தவிதமான எதிர்பார்ப்பு இல்லாமல் உழையுங்கள். 7 மாத காலம் உழையுங்கள்" என்று பேசினார்.












Click it and Unblock the Notifications