AI Gemini இல் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பிய இளைஞர்.. போலீஸ் ஆக்ஷன்
கோவை: கோவையில் பெண்ணின் புகைப்படத்தை இளைஞர் ஒருவர் ஏஐ ஜெமினி டூல் மூலமாக ஆபாசமாக சித்தரித்து அப்பெண்ணுக்கே அனுப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, போலீஸார் அந்த இளைஞரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அபரிமிதமானதாக உள்ளது. மருத்துவம், கல்வி, தொழில் என பல்வேறு துறைகளிலும் ஏஐ தொழில்நுட்பம் தற்போது கோலோச்சி வருகிறது. ஒருபுறம் ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் நன்மைகள் கிடைத்தாலும், வேலை இழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. பல்வேறு முன்னணி நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சமீபகாலமாக ஏஐ தொழில்நுட்பம் மூலமாக புகைப்படங்களை நமக்கு விரும்பியவாறு மாற்றியமைக்கும் வசதி டிரெண்டாகி வருகிறது. மிகவும் எளிமையாகவும், குறைந்த நேரத்திலும் பிராம்ப்ட் கொடுத்து எடிட் செய்ய முடியும் என்பதால் இது இளைஞர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வசதியை சிலர் தவறான வழிகளிலும் பயன்படுத்தி வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில், கோவையில் பெண்ணின் புகைப்படத்தை இளைஞர் ஒருவர் ஏஐ ஜெமினி டூல் மூலமாக ஆபாசமாக சித்தரித்து அப்பெண்ணுக்கே அனுப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, போலீஸார் அந்த இளைஞரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம், கே.கே.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (24). இவர் ஆட்டோமொபைல் தொடர்பான ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். மணிகண்டன் சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். அதில் பல பெண்களை அவர் பின்தொடர்ந்துள்ளார். குறிப்பிட்ட ஒரு பெண்ணின் சமூகவலைதள பக்கத்தை சமீபகாலமாக பின்தொடர்ந்து வந்துள்ளார். அப்போது, அவரின் புகைப்படங்களை மணி பதிவிறக்கம் செய்துள்ளார்.
பிறகு அந்த புகைப்படங்களை ஏஐ ஜெமினி டூலில் ஆபாசமாக எடிட் செய்துள்ளார். அரை நிர்வாண புகைப்படமாக சித்தரித்து, அதை அந்தப் பெண்ணுக்கே அனுப்பியுள்ளார். இதைப் பார்த்த பெண் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். மணிகண்டன் தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு புகைப்படம் அனுப்பியதோடு மட்டுமல்லாமல் தவறாகப் பேசியுள்ளார். இதனால், பயந்துபோன அப்பெண் கடும் மன உளைச்சளுக்கு ஆளாகியுள்ளார்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் கோவை மாநகர சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், மணிகண்டனை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் காவல் துறையிடம் குற்றத்தை ஒப்புக் கொண்டார். காவல் துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications