நாகர்கோவில் இளைஞரால் அதிர்ந்த கோவை.. காதலி பேசாததால் ஆத்திரம்.. செவிலியருக்கு கத்திக்குத்து
கோவை: கோவை மாவட்டம், அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையான குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் செவிலியரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இளைஞர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சமீபகாலமாக மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, காதலிக்கும் இளைஞர்கள் காதலை மறுத்தாலோ அல்லது பாதியிலேயே காதலிப்பதை நிறுத்தி விட்டாலோ சம்பந்தப்பட்ட பெண்கள் மீது தாக்குதலில் ஈடுபடும் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், காதலி பேசுவதையும், பழகுவதையும் நிறுத்தியதால் நாகர்கோவிலைச் சேர்ந்த இளைஞர் கோவை தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றும் பெண்ணை கத்தியால் குத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அவிநாசி சாலையில் உள்ளது குப்புசாமி நாயுடு தனியார் மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் கனிஷ்கா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் செவிலியராகப் பணியாற்றி வந்துள்ளார். இந்த மருத்துவமனையில் உள்ள மகளிர் விடுதியில் கனிஷ்கா தங்கி பணியாற்றி வந்துள்ளார். கனிஷ்காவுக்கும், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயிலைச் சேர்ந்த சுஜித் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர்.
ஒருகட்டத்தல் சுஜித்தின் செயல்பாடுகள் பிடிக்காததால் கனிஷ்கா அந்த இளைஞருடன் பேசுவதையும், பழகுவதையும் தொடர்ந்து தவிர்த்து வந்துள்ளார். இந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் உள்ள மகளிர் விடுதிக்குள் சுஜித் அனுமதியில்லாமல் நுழைய முயற்சி செய்துள்ளார். இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த விடுதிக் காப்பாளர் இளைஞர் சுஜித்தை தடுத்துள்ளார்.
ஆனால், அந்த இளைஞர் அவரை கடும் சொற்களால் பேசி அவரை தள்ளிவிட்டு உள்ளே சென்றுள்ளார். அப்போது, சுஜித் கனிஷ்காவின் கழுத்தை நெரித்துள்ளார். தொடர்ந்து, கத்தியால் குத்த முயன்றுள்ளார். அப்போது பிரியா அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அதில் அவருடைய கைகளில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த விடுதிக் காப்பாளர்கள் மற்றும் மருத்துவமனையின் காவலாளிகள் சுஜித்தை பிடித்து பந்தய சாலை காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் குறித்து விடுதிக் காப்பாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின்பேரில் ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சுஜித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். போலீஸார் அந்த இளைஞரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், கனிஷ்காவும், சுஜித்தும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். சுஜித்தின் நடவடிக்கை பிடிக்காததால் திடீரென அவரிடம் பேசுவதையும், பழகுவதையும் நிறுத்தியுள்ளார் கனிஷ்கா. திடீரென அந்தப் பெண் பேசுவதை நிறுத்தியதால் கடும் ஆத்திரமடைந்த சுஜித் கனிஷ்கா மீது இந்த கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே மருத்துவமனையில் செவிலியரின் குடும்ப பிரச்சனை காரணமாக அவரை அவரது கணவர் கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications