சீனாவின் டபுள் ஆக்ட்.. விக்கிரமசிங்கே, ராஜபக்சேவுடன் அடுத்தடுத்து தூதர் சந்திப்பு!
கொழும்பு: இலங்கைக்கான சீன தூதர் செங் சியூவான், இலங்கை பிரதமர் பதவியில் நீக்கப்பட்ட ரணில் விக்கிரசிங்கே மற்றும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ராஜபக்சே இருவரையும் அடுத்தடுத்து சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்த சந்திப்பின் மூலம் சீனா சில செய்திகளை மறைமுகமாகவும், நேரடியாகவும் சுட்டிக் காட்டியுள்ளது. இலங்கை அதிபர் சிறிசேனா, திடீரென ரணிலை நீக்கி விட்டு ராஜபக்சேவை பிரதமராக்கினார். அவரும் உடனடியாக பதவியேற்றார். ஆனால் ராஜபக்சே அரசுக்கு பெரும்பான்மை பலம் இல்லை. சாதாரண பெரும்பான்மை கூட கிடையாது.
நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை ரணில் கட்சிதான் தனிப்பெரும் கட்சியாகும். சிறிசேனா, ராஜபக்சே கட்சிக்கு மொத்தமே 95 எம்.பிக்கள்தான் உள்ளனர். ஆனால் ரணில் கட்சிக்கு 106 பேர் உள்ளனர். இதுதவிர தமிழர் கட்சிகளின் வாக்குகள் மிக முக்கியமானவை. அது கிடைத்தால்தான் ராஜபக்சேவால் பிரதமராக நீடிக்க முடியும்.
சிறிசேனா ஒரு சீன ஆதரவாளர் என்பது பலமான கருத்தாக உள்ளது. ராஜபக்சேவும் அப்படியே. தமிழர்களை அழித்தொழிப்பதற்காக மட்டுமே அவர் இந்தியாவுடன் நெருங்கி வந்தார், பலன்களை அடைந்து கொண்டார். ஆனால் அவரும் சரி, சிறிசேனாவும் சரி சீனாவுக்குத்தான் முன்னுரிமை கொடுப்பார்கள். ஆனால் ரணில் அப்படி இல்லை, இந்தியாவுடன் நட்பாக இருப்பவர் ரணில். ஈழத் தமிழர்களிடத்திலும் கூட காட்டம் காட்டாதவர்.
இந்த நிலையில்தான் ரணில் போய் ராஜபக்சே வந்துள்ளார். இந்தப் பின்னணியில், சீன தூதர் செங், ரணிலை இன்று சந்தித்துப் பேசினார். அதேபோல ராஜபக்சேவையும் அவர் சந்தித்தார். இதன் மூலம் ரணிலையும் நாங்கள் மதிக்கிறோம், அதேசமயம், ராஜபக்சேவை அங்கீகரிக்கிறோம் என்பதாக சீன மறைமுக செய்தியை வெளிப்படுத்தியுள்ளது.