இந்தியாவுடன் இடைவிடாது மல்லுக்கட்டு.. இலங்கையில் ஐ.ஓ.சிக்கு போட்டியாக சினோபெக்கை களமிறக்கும் சீனா
கொழும்பு: இலங்கையில் இந்தியாவின் எண்ணெய் நிறுவனமான ஐ.ஓ.சிக்கு போட்டியான தமது சினோபெக் நிறுவனத்தை களமிறக்கப் போவதாக சீனா அறிவித்துள்ளது.
இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் 90% இலங்கை அரசுக்கு சொந்தமான சிலோன் பெட்ரோலிய கூட்டுத் தாபனம் உள்ளது. எஞ்சிய 10%, இந்தியாவின் ஐ.ஓ.சி. லங்கா நிறுவனம் மூலம் விநியோகிக்கப்படுகிறது. மேலும் திருகோணமலையில் பிரமாண்ட எரிபொருள் எண்ணெய் சேமிப்பு கிடங்குகளையும் இந்தியா தன் வசம் வைத்திருக்கிறது.
இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தத்தளிக்கும் நிலையில் இந்தியாதான் பெருமளவு கடனுதவி வழங்கியது. இந்தியாதான் பெருமளவு எரிபொருட்களையும் இலங்கைக்கு அனுப்பி வைத்திருக்கிறது.
ஆனால் இலங்கை அரசாங்கமானது இந்தியாவுக்கு நன்றிக் கடன் செலுத்தாமல் சீனாவுக்கான விசுவாசத்தையே இடைவிடாமல் வெளிப்படுத்துகிறது. இந்தியாவை உளவு பார்க்கக் கூடிய சீனாவின் கப்பலுக்கு முதலில் அனுமதி கொடுத்தது இலங்கை. இந்தியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து நிலைகளையும் இலங்கையின் அம்பாந்தோட்டா துறைமுகத்தில் இருந்து சீனா எளிதாக உளவு பார்க்க வாய்ப்பை உருவாக்கி தந்தது இலங்கை. இதனை இந்தியா மிக கடுமையாக எதிர்த்தது. தொடக்கத்தில் இப்படியான ஒரு உளவு கப்பலுக்கு அனுமதியே தரவில்லை என்றது இலங்கை. ஆனால் இந்தியாவின் கடும் நெருக்கடியால் ஒப்புக் கொண்டது இலங்கை. ஒரு கட்டத்தில் இந்தியா எச்சரிக்கை விடுத்தது. இதனால் சீனாவின் உளவு கப்பலுக்கான அனுமதியை ரத்து செய்தது இலங்கை.
இன்னொருபக்கம், இலங்கையின் எரிபொருள் விநியோகத்தில் வெளிநாடுகளை அனுமதிப்போம் என அந்நாட்டு அரசு அறிவித்தது. இதனை தற்போது சீனா தமக்கான ஒருவாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. இலங்கையின் அம்பாந்தோட்டையில் ஏற்கனவே சீனாவின் சினோபெக் எனப்படும் எரிபொருள் விநியோக நிறுவனம் முகாமிட்டிருக்கிறது. தற்போது சினோபெக்கை, இந்தியாவின் ஐஓசி லங்காவுக்கு போட்டியாக இலங்கையில் செயற்படுத்த உள்ளதாகவும் சீனா கூறியுள்ளது.
இது தொடர்பாக சினோபெக் நிறுவனம் கூறுகையில், இலங்கையின் உள்ளூர் சந்தையில் எரிபொருள் இறக்குமதி, விநியோகம், விற்பனை செய்வதற்கான சமர்ப்பித்திருக்கிறோம் என பதிவிட்டுள்ளது. இலங்கைக்கு பெருமளவு கடன் கொடுத்த சீனா, அந்நாட்டின் நிலப்பரப்புகளை கையகப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இலங்கையின் எரிபொருள் விநியோகத்தில் சீனா தலையிடுவது என்பது தெற்காசிய பிராந்திய அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பிவிட்டிருக்கிறது.
இலங்கையில் சீனா உளவு கப்பல்... இந்திய பாதுகாப்புக்கு மிகப் பெரும் அச்சுறுத்தல்: ராஜ்யசபாவில் வைகோ