இலவசமாக மருந்து அளித்த இந்தியா... தடுப்பூசி போடும் பணிகளை தொடங்கிய இலங்கை
கொழும்பு: இந்தியா அளித்த தடுப்பூசிகளைக் கொண்டு, தனது நாட்டிலுள்ள முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகளை இலங்கை அரசு தொடங்கியுள்ளது.
கொரோனா வைரசுக்கு எதிராக இதுவரை ஃபைசர், மாடர்னா மற்றும் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிகளின் அவசரக்கால பயன்பாட்டிற்கு பல்வேறு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன. பல நாடுகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.
இருப்பினும், உலக நாடுகளின் தேவைக்கு ஏற்ற வகையில் தடுப்பூசி உற்பத்தி இல்லை. இதன் காரணமாக பல்வேறு நாடுகளிலும் தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடுகள் உள்ளன.
இலங்கைக்கு தடுப்பூசி அனுப்பிய இந்தியா
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், இந்தியா தனது அண்டை நாடுகளுக்கு இலவசமாகத் தடுப்பூசிகளை வழங்கியது. அதன்படி இலங்கைக்கு ஐந்து லட்சம் தடுப்பூசி டோஸ்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அதேபோல தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட மேலும் பல நாடுகளுக்கும் வணிக முறையிலும் தடுப்பூசிகளை இந்தியா அனுப்பியிருந்தது.
தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்
இந்தியா அனுப்பிய கொரோனா தடுப்பூசிகளைக் கொண்டு இலங்கை தனது நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளது. அதன்படி முதல்கட்டமாகச் செவிலியர்கள் உட்பட 1.5 லட்சம் முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி வழங்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இலங்கையின் நரஹன்பிதா பகுதியிலுள்ள ராணுவ மருத்துவமனையில் சிறப்பு மருத்துவராக உள்ள டாக்டர் ஆனந்த விஜேவிக்ரெமா என்பவருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டது.
இந்தியா தூதர்
இது குறித்து இலங்கை நாட்டிற்கான இந்திய தூதர் தனது ட்விட்டரில், "கொழும்பிலுள்ள பல்வேறு மருத்துவமனைகளிலும் இந்தியாவில் தயராகிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. கொழும்பு நகரிலுள்ள தொற்று நோய் தேசிய நிறுவனத்தில் இந்த நிகழ்ச்சி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது" என்று பதிவிட்டிருந்தார். இலங்கை நாட்டில் தற்போது வரை சுமார் 61 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 297 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவிஷீல்டு தடுப்பூசி
இந்தியாவில் புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்களின் தடுப்பூசிகளை கோவிஷீல்டு என்ற பெயரில் உற்பத்தி செய்கின்றன. இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளுக்குத் தேவையான ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியை உற்பத்தி செய்து விநியோகிக்கும் பொறுப்பு சீரம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசிகளையே இந்தியா தனது அண்டை நாடுகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.