அதிர்ந்த சென்னை.. இலங்கையையும் குலுங்க வைத்த நிலநடுக்கம்! அலறியடித்து ஓடிய மக்கள் - அப்போ அதே தானா?
இலங்கை புத்தளம் பகுதியில் 3.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டு இருப்பது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கொழும்பு: சென்னையில் ராயபுரம், அண்ணாநகர் பகுதிகளில் கட்டிடங்கள் குழுங்கியதால் பொதுமக்கள் வீதிகளில் திரண்ட நிலையில், இலங்கை புத்தளம் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் சென்னையில் ஏற்பட்டதும் நில அதிர்வாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இன்று காலை 10:15 மணியளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள லாயிட்ஸ் ரோடு அருகே கட்டிடம் ஒன்று குலுங்கியதாக கூறி அதில் இருந்தவர்கள் அனைவரும் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து பதறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினார்கள்.
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நிலநடுக்கம் குறித்த உலக மக்களின் பீதியும் அதிகரித்து உள்ளது. இதனால் லேசான நடுக்கம் ஏற்பட்டாலும் மக்களுக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது.

சென்னையில் குலுங்கிய கட்டிடம்
இந்த நிலையில்தான் சென்னை ராயப்பேட்டையில் கட்டிடம் குழுங்கியதை பலர் உணர்ந்து இருக்கிறார்கள். அதை தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்ட கட்டிடம் இடிந்து விழுமோ என்ற அச்சத்தின் காரணமாக அனைவரும் அதை விட்டு வெளியேறினர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. ஆனால் நிலநடுக்கம் ஏற்பட்டது தொடர்பாக அரசு தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

போர், மெட்ரோ காரணமா?
இந்திய புவியியல் ஆய்வு நிறுவனமும் நிலநடுக்கம் ஏற்பட்டதை உறுதி செய்யவில்லை. இந்த நிலையில் ராயப்பேட்டையில் குலுங்கிய கட்டிடத்திற்கு அருகே ராட்சத போர் அமைக்கும் பணி நடைபெற்ற காரணத்தால் கட்டிடம் குலுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முந்தைய காலங்களில் மெட்ரோ ரயில் அமைக்கும் பணிகளால் அவ்வப்போது சென்னையில் கட்டிடங்களில் லேசாக அதிர்வு உணரப்படும் என்று கூறப்படுகிறது.

மெட்ரோ நிர்வாகம் விளக்கம்
இன்றும் அதேபோல் மெட்ரோ பணிகளால் கட்டிடத்தில் அதிர்வு ஏற்பட்டு இருக்கலாம் என்றும் சிலர் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளின் காரணமாக நில அதிர்வு ஏற்படவில்லை என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்து உள்ளது. அதே நேரம் சென்னை அண்ணா நகரில் சில வினாடிகள் நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இலங்கையில் நிலநடுக்கம்
சென்னையில் ஏற்பட்டது நில அதிர்வா அல்லது கட்டுமானப் பணிகளின் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் இலங்கையில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டு இருக்கிறது. இலங்கையின் தெற்கு பகுதியான புத்தளத்திலும், வெல்லவயம் பகுதிகளிலும் இன்று காலை 11:44 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டு உள்ளது.

அலறியடித்த மக்கள்
பூமிக்கு அடியில் 7 முதல் 8 கிலோ மீட்டர் ஆழத்தில் பதிவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.3 ஆக இருந்தது என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மிதமான இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினார்கள்.

2 வது முறை
இதேபோல் கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதியும் புத்தலம், வெல்லவயம், மோனராகலா உள்ளிட்ட பகுதிகளில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளன. சென்னையில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியான ஒன்றரை மணி நேரத்தில் இலங்கையிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது சென்னை வாசிகளை அதிர்ச்சியடைய செய்து உள்ளது.












Click it and Unblock the Notifications