இலங்கை தாக்குதலில் 4 சீனா விஞ்ஞானிகள் பலி- ஐ.எஸ். இயக்கத்தின் பின்னணியில் சர்வதேச நாடுகள்?
கொழும்பு: இலங்கையில் ஈஸ்டர் நாளில் மனிதவெடிகுண்டுகள் நடத்திய தாக்குதல்களில் 4 சீனா விஞ்ஞானிகளும் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் தாக்குதலை நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் பின்னணியில் சர்வதேச நாடுகளுக்கும் தொடர்பிருக்கலாம் என்கிற சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இலங்கையில் மனிதவெடிகுண்டு தாக்குதல்களை நடத்தியதாக ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்றிருக்கிறது. இருப்பினும் ஐ.எஸ். இயக்கத்தின் பின்னணியில் சர்வதேச நாடுகளுக்கும் தொடர்பிருக்கலாம் என கூறப்பட்டு வந்தது.

இலங்கையின் இயற்கை வளங்களை கொள்ளையடிக்கவே பயங்கரவாதத்தை ஒடுக்குகிறோம் என்கிற பெயரில் சில நாடுகள் உள்ளே நுழைந்திருக்கின்றன என சிங்கள அரசியல்வாதிகள் பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஈஸ்டர் தாக்குதல்களில் 4 சீனா விஞ்ஞானிகளும் பலியாகி இருப்பதை கொழும்பில் உள்ள அந்நாட்டு தூதரகம் உறுதி செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியப் பெருங்கடலின் இயற்கை வளம் குறித்த ஆய்வில் இந்த விஞ்ஞானிகள் ஈடுபட்டிருந்தனர். இது தொடர்பாக கிங்ஸ்பரி ஹோட்டலில் கருத்தரங்கம் ஒன்றும் நடைபெற இருந்தது.
இக்கருத்தரங்கில் பங்கேற்பதற்காக ஏப்ரல் 18, 19 அன்ரு லி ஜியான் (வயது 38), பான் வென் லியாங் (வயது 35) ஆகியோர் தலைமையில் சீனா விஞ்ஞானிகள் குழு வருகை தந்துள்ளது. இக்குழுவினர் கிங்ஸ்பரி ஹோட்டலில் தங்கி இருந்த போது ஏப்ரல் 21-ந் தேதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
தற்கொலைப் படைத் தாக்குதலில் 2 சீனா விஞ்ஞானிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 2 விஞ்ஞானிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விஞ்ஞானிகள் படுகொலைக்கு சீனா தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஐ.எஸ். இயக்கத்துக்கும் வெளிநாடுகளுக்கும் தொடர்பிருப்பதாக கூறப்பட்டு வருகிறது. தற்போது சீனா விஞ்ஞானிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
இதனால் இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கும் அப்பால் சர்வதேச நாடுகளின் சதியும் பின்னணியில் இருக்கலாம் என்கிற சந்தேகம் வலுவடைகின்றது என்கின்றனர் இலங்கை ஆய்வாளர்கள்.












Click it and Unblock the Notifications