கோத்தபாய ராஜ்பக்சே அண்டைநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டதாக தவறாக சொல்லிவிட்டேன்: சபாநாயகர் மஹிந்த யாப்பா
கொழும்பு: இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடு ஒன்றில் பதுங்கி உள்ளதாக தாம் தவறுதலாக கூறிவிட்டதாக அந்நாட்டு சபாநாயகர் மஹிந்த யாப்பா கூறியுள்ளார்.
இலங்கையில் ஜூலை 9-ந் தேதி மக்கள் கிளர்ச்சியின் புதிய உச்சமாக ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றினர். பொதுமக்கள் கட்டுப்பாட்டில் ஜனாதிபதி மாளிகை இருந்த போதும் அதற்கு முன்னரே ராணுவத்தின் உதவியுடன் கோத்தபாய ராஜபக்சே அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இலங்கை ராணுவத்திடம் தஞ்சமடைந்திருந்த கோத்தபாய வெளிநாட்டுக்கு தப்பி ஓடியதாக தகவல்கள் தெரிவித்தன. கொழும்பில் இருந்து தப்பிய கோத்தபாய ராஜபக்சே, திருகோணமலை துறைமுகத்துக்கு குடும்பத்துடன் சென்று கடற்படையிடம் தஞ்சமடைந்திருந்தார்.

பின்னர் குடும்பத்துடன் ரத்மலானை விமான நிலையத்துக்கு சென்ற கோத்தபாய ராஜபக்சே, அங்கிருந்து கொழும்பு சென்றுள்ளார். கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கோத்தபாய ராஜபக்சே குடும்பத்துடன் சென்றதாகவும் அங்கிருந்தே வெளிநாட்டுக்கு தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது.
இதனை இலங்கை சபாநாயகர் மஹிந்த யாப்பா உறுதி செய்யும் வகையில் பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் மஹிந்த யாப்பா, அண்டை நாடு ஒன்றில் கோத்தபாய ராஜபக்சே தற்போது தங்கி உள்ளார். இலங்கைக்கு வரும் புதன்கிழமையன்று கோத்தபாய ராஜபக்சே திரும்ப உள்ளார் என்றார்.
இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருந்த மகிந்த ராஜபக்சே, சில நாட்கள் திருகோணமலையில் இலங்கை கடற்படை பாதுகாப்பில் இருந்தார். பின்னர் மாலத்தீவில் இந்திய தொழிலதிபருக்கு சொந்தமான சொகுசு பங்களாவில் பதுங்கி கிடந்தார்.
இந்நிலையில் தாம் பேட்டியில் தவறான தகவலைத் தெரிவித்துவிட்டதாக மஹிந்த யாப்பா விளக்கம் அளித்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். மஹிந்த யாப்பா திடீரென ஏன் மறுத்து பேசுகிறார் என்கிற விவாதமும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications