இலங்கைக்கு இந்திய ராணுவமா? சு.சுவாமி பற்ற வைத்த வெடியை திட்டவட்டமாக மறுக்கும் இந்திய தூதரகம்
கொழும்பு: இலங்கையில் அசாதாரண அரசியல் சூழல் நிலவி வரும் நிலையில் இந்திய ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை இலங்கைக்கான இந்திய தூதரகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இலங்கையில் ஒவ்வொரு மாதமும் 9-ந் தேதி மக்கள் புரட்சி தலைகீழ் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த மாதம் ஜூலை 9-ந் தேதி மக்கள் புரட்சியின் மூலம் 2 விக்கெட்டுகள் சாய்க்கப்பட்டன. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, இடைக்கால பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இருவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.

அதேநேர்த்தில் பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கானோர் கொழும்பில் ஜனாதிபதி மாளிகை, பிரதமர் இல்லம் ஆகியவற்றைக் கைப்பற்றினர். ஜனாதிபதி மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பொதுமக்கள், அதை பொழுது போக்கு இடமாகவும் மாற்றினர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் பூர்வீக இல்லத்தை தீ வைத்தும் எரித்தனர்.
இதனையடுத்து ஜனாதிபதி மாளிகையைவிட்டு தப்பி ஓடிய கோத்தபாய ராஜபக்சே, தற்போது இலங்கை ராணுவத்திடம் தஞ்சமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த பின்னணியில், பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், பெரும்பான்மை பெற்ற ராஜபக்சேக்களை வீழ்த்த அனுமதிக்கக் கூடாது; ராஜபக்சே சகோதரர்கள் கேட்டுக் கொண்டால் இலங்கைக்கு இந்திய ராணுய்வத்தை அனுப்ப வேண்டும் என்றார். இதனையடுத்து இலங்கைக்கு இந்திய ராணுவம் அனுப்பப்படுகிறதா? என சில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் இலங்கைக்கான இந்திய தூதரகம் மறுப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், இலங்கைக்கு இந்திய ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மை இல்லை. இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயக அமைப்புகள் மற்றும் மதிப்புகள் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம் செழிப்பு மற்றும் முன்னேற்றத்தை விரும்பும் இலங்கை மக்களுடன் இந்தியா நிற்கிறது என தெரிவித்திருக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications