'மிரட்டும் டெல்டா,திணறும் இலங்கை..' தக்க நேரத்தில் 100 டன் மருத்துவ ஆக்சிஜனை.. அனுப்பி உதவிய இந்தியா
கொழும்பு: டெல்டா கொரோனாவால் தற்போது மிக மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு உதவும் வகையில் 100 டன் மருத்துவ ஆக்சிஜனை இந்தியா அனுப்பியுள்ளது.
இந்தியாவில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. அந்த சமயத்தில் தினசரி வைரஸ் பாதிப்பு நான்கு லட்சம் வரை கூட சென்றது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவ கட்டமைப்பிற்கு மிகப் பெரியளவில் அழுத்தம் ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் ஆக்சிஜன் தொடங்கி பல்வேறு மருத்துவ உபகரணங்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டது.

டெல்டா கொரோனா
அந்த சமயத்தில் உலகின் பல்வேறு நாடுகளும் இந்தியாவுக்கு உதவின. இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை இந்தளவு மோசமானதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. அதில் முக்கியமானது டெல்டா கொரோனா. இதுவரை கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகைகளில் டெல்டா கொரோனா தான் அதிவேகமாகப் பரவுகிறது. இந்தியாவில் இப்போது வைரஸ் பாதிப்பு குறைந்துள்ள நிலையிலும், உலகின் மற்ற நாடுகளில் டெல்டா கொரோனா தனது ஆட்டத்தைத் தொடங்கியுள்ளது.

உலக நாடுகள்
ஜப்பான், ஆஸ்திரேலியா என பல்வேறு நாடுகளிலும் டெல்டா கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதேபோல இலங்கையிலும் டெல்டா கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது. இந்தியாவில் ஏற்பட்டதைப் போலவே அங்கும் தினசரி கொரோனா பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. அதேபோல மருத்துவ உதவி தேவைப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் இலங்கையின் ஆக்சிசன் தேவை 30% வரை அதிகரித்துள்ளது. இதைச் சமாளிக்க முடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது.

100 டன் ஆக்சிஜன்
இந்தச் சூழலில் இலங்கைக்கு உதவும் வகையில் 100 டன் மருத்துவ ஆக்சிஜனை இலங்கைக்கு இந்தியா அனுப்பியுள்ளது. இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச விடுத்த கோரிக்கையின் ஏற்று, இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான சக்தி கப்பல் மூலம் 100 டன் திரவ ஆக்சிஜன் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல இலங்கை கடற்படைக்குச் சொந்தமான அதே 'சக்தி' எனப் பெயரிடப்பட்ட மற்றொரு கப்பல் மூலம் சென்னையில் இருந்து 30 டன் ஆக்சிஜன் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இலங்கைக்கு இந்தியா செய்த உதவி
அண்டை நாடான இலங்கைக்கு, கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்தே இந்தியா தொடர்ந்து பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் கோவிஷீல்டு தடுப்பூசிகளை இலங்கைக்கு இந்தியா அன்பளிப்பாக அளித்தது. அதை வைத்தே இலங்கை வேக்சின் பணிகளைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. அதேபோல கடந்த ஏப்ரல் மே காலகட்டத்தில் 26 டன் மருத்துவ பொருட்களையும் இலங்கைக்கு இந்தியா அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

என்ன காரணம்
இலங்கை மட்டுமின்றி நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் டெல்டா கொரோனா கேஸ்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாகப் பல மாதங்களாக வைரசைப் பாதிப்பு இல்லாமல் இருந்த நியூசிலாந்து நாட்டிலும் இப்போது டெல்டா கொரோனா பரவ தொடங்கியுள்ளது. இதனால் அங்கு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அதாவது கொரோனா வேக்சின் பணிகளைத் தீவிரமாக மேற்கொள்ளாத பெரும்பாலான நாடுகள் டெல்டா கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications