இலங்கை பறந்த ஜெய்சங்கர்.. அதிபர் தேர்தலில் தோற்ற சஜித் பிரேமதாசவுடன் திடீர் சந்திப்பு.. என்ன காரணம்?
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் மத்திய அரசின் ஆதரவு பெற்ற வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வியடைந்தார். சீனா ஆதரவு பெற்ற அனுர குமார திசனநாயக வெற்றி பெற்றார். இந்நிலையில் தான் இலங்கை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திடீரென்று சஜித் பிரேமதாசவை சந்தித்து பேசியதன் பின்னணி பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
இலங்கை அதிபர் தேர்தல் கடந்த மாதம் 21ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் அதிபராக இருந்த ரணில் விக்ரமசிங்கே, தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த அனுர குமார திசனநாயக, எதிர்க்கட்சி தலைவர் எஸ்ஜேபி எனும் சமாகி ஜன பலவேகய கட்சியின் சஜித் பிரேமதாச, முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர்.

இதுதவிர ஈழத் தமிழர் பொதுவேட்பாளராக அரியநேந்திரன் களமிறங்கினார். இதில் தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான அனுர குமார திசனநாயக வெற்றி பெற்றார். சஜித் பிரேமதாச 2ம் இடம் பிடித்து தோல்வியடைந்தார். இதில் சஜித் பிரேமதாசவுக்கு மத்திய அரசு ஆதரவு அளித்தது. இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக சஜித் பிரேமதாச தோல்வியடைந்தார். தற்போது இலங்கை அதிபராக பொறுப்பேற்றுள்ள அனுர குமார திசனநாயக சீனாவின் ஆதரவு நிலைப்பாட்டை கொண்டவர்.
இந்நிலையில் தான் இலங்கையில் புதிய அதிபராக அனுர குமார திசனநாயக பொறுப்பேற்றவுடன் அங்கு செல்லும் முதல் வெளிநாட்டு பிரதிநிதியாக ஜெய்சங்கர் கிளம்பி சென்றார். இந்நிலையில் தான் இலங்கை சென்ற ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த சஜித் பிரேமதாசவை இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு என்பது நட்பு ரீதியாக நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுபற்றி ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் போட்டோவை வெளியிட்டு சந்திப்பு பற்றி தெரிவித்துள்ளார். அதில், ‛‛எஸ்ஜேபி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவை கொழும்புவில் இன்று சந்தித்தேன். அப்போது இந்தியா- இலங்கை இடையேயான உறவு விஷயத்தில் தொடர்ச்சியான அவரது செயலுக்கு பாராட்டினேன்’’ என தெரிவித்தார்.
இதுபற்றி சஜித் பிரேமதாச, ‛‛பிராந்திய வளர்ச்சிக்காக இருதரப்பு இடையேயான பரஸ்பர ஆதரவு என்பது தேவையாக உள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் வந்த ஜெய்சங்கரை பார்த்ததில் மகிழ்ச்சி. அவர் எப்போதும் ஒன்றை சொல்வார். வலுவான அதேவேளையில் நல்ல உறவு கொண்ட அண்டை நாடு வேண்டும் என்று அவர் அடிக்கடி கூறுவார். அந்த வகையில் இலங்கையின் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியை முன்னெடுப்பதில் இந்தியாவின் தொடர்ச்சியான முழுமையான ஆதரவை நாங்கள் எதிர்பார்க்கிறோம்'' என கூறியுள்ளார்.
இலங்கை அதிபர் ஏகேடி வீடா இது? நேரடி விசிட் அடித்த தமிழர்! எளிமையாக வாழும் உறவினர்கள்
முன்னதாக ஜெய்சங்கர் சஜித் பிரேமதாசவை சந்திப்பதற்கு முன்பு அந்நாட்டின் அதிபர் அனுர குமார திசநாயக மற்றும் பிரதமர் ஹரினி அமரசூர்யா மற்றும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜிதா ஹிராத் ஆகியோரை சந்தித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications