யாழ்ப்பாணம் விடுதலைப் புலிகள் வசமாவதைத் தடுக்க உதவியது பாக்.:இலங்கை வெளியுறவு செயலர் ஜயநாத் கொலம்பகே
கொழும்பு: யாழ்ப்பாணத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் கைப்பற்றுவதைத் தடுக்க உதவியது பாகிஸ்தான் ராணுவம்தான் என்று இலங்கை வெளியுறவுத் துறை செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மகிந்த ராஜபக்சே பிரதமராகப் பொறுப்பேற்ற நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவி, அதிபர் (ஜனாதிபதி) கோத்தபாய ராஜபக்சேவுக்கு ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து இலங்கையின் புதிய வெளியுறவுத் துறை செயலாளராக முன்னாள் ராணுவ தளபதி ஜயநாத் கொலம்பகே நியமிக்கப்பட்டார்.
புதிய செயலராகப் பதவியேற்ற ஜயநாத் கொலம்பகே ஊடகங்களுக்கு அளித்து வரும் பேட்டிகளில், வெளியுறவு கொள்கைகளில் இந்தியாவுக்கே முதலிடம் என்ற கோட்பாடை பின்பற்றுவோம் என கூறி வருகிறார். மேலும் இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கும் கேந்திர பாதுகாப்புக்கும் இலங்கை ஒருபோதும் எதிராக இருக்காது என்றும் ஜயநாத் கொலம்பகே குறிப்பிட்டிருந்தார்.
கொரோனா என்பது கடவுளின் செயல்.. ஜிஎஸ்டியில் வருவாயில் பெரிய சரிவு.. நிர்மலா சீதாராமன் விளக்கம்!
இந்தியா, பாக். நட்பு நாடுகள்
இதனிடையே கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பாகிஸ்தான் தொடர்பான கேள்விக்கு ஜயநாத் கொலம்பகே கூறி இருப்பதாவது: தெற்காசியாவைப் பொறுத்தவரையில் இந்தியாவும் பாகிஸ்தானும் பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கின்றன. இருநாடுகளுமே எங்களது நட்பு நாடுகள்தான்.
புலிகளிடம் வீழ காத்திருந்த யாழ்.
இலங்கையின் மிகவும் சிக்கலான தருணங்களில் இருநாடுகளுமே உதவியும் இருக்கின்றன. யுத்த களத்தில் ஒருமுறை இலங்கையின் வடக்கு பகுதியான யாழ்ப்பாணத்தை இலங்கை ராணுவம் கைவிட வேண்டிய நெருக்கடியை விடுதலைப் புலிகள் தாக்குதல்கள் மூலம் உருவாக்கி இருந்தனர்.
இலங்கைக்கு உதவிய பாக்.
அந்த நேரத்தில் பாகிஸ்தான் ராணுவமானது பல்குழல் ராக்கெட் லாஞ்சர்கள் (Multi-barrel rocket launchers)களை இலங்கைக்கு அனுப்பி வைத்தது. அந்த உதவியின் மூலம் விடுதலைப் புலிகள் கைகளில் யாழ்ப்பாணம் விழுவதை தடுத்து நிறுத்தப்பட்டது. இருப்பினும் இலங்கையை எந்த ஒருநாடும் இன்னொரு நாட்டுக்கு எதிரான தளமாக பயன்படுத்த நாங்கள் அனுமதிக்கமாட்டோம். இருநாடுகளுமே எங்களுக்கு முக்கியம்.
இந்தியாவுக்கே முதலிடம்
இந்தியா எங்களது அண்டைநாடு. அதனால்தான் இந்தியாவுக்கே முதலிடம் என்கிற வெளியுறவு கொள்கையை பின்பற்றுவதாக கூறுகிறோம். அதாவது இந்தியாவின் கேந்திர பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கும் எந்த ஒரு செயலையும் இலங்கை ஒருபோதும் செய்யாது என்பதுதான் அதன் அர்த்தம். இவ்வாறு ஜயநாத் கொலம்பகே கூறியுள்ளார்.