தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் - ராஜபக்சே திடீர் சந்திப்பு.. இலங்கையில் பரபரப்பு!
இலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனுடன் அந்நாட்டின் புதிய பிரதமர் ராஜபக்சே திடீர் சந்திப்பு நடத்தி உள்ளார்.
கொழும்பு: இலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனுடன் அந்நாட்டின் புதிய பிரதமர் ராஜபக்சே திடீர் சந்திப்பு நடத்தி உள்ளார்.
இலங்கை அரசியலில் தற்போது நிறைய குழப்பங்கள் நிலவி வருகிறது. இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்துள்ளார்.
ரணில் விக்ரம சிங்கே அங்கு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனால் பாராளுமன்ற சபாநாயகர், தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கேதான் பிரதமராக இருப்பார் என்றுள்ளார்.
இந்த நிலையில் அங்கு பாராளுமன்றத்தில் எப்போது வேண்டுமானாலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வாய்ப்பு இருக்கிறது. இதையடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனுடன் அந்நாட்டின் புதிய பிரதமர் ராஜபக்சே திடீர் சந்திப்பு நடத்தி உள்ளார்.
கொழும்புவில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது குழு கூட்டத்தை நடத்த உள்ளது. இலங்கையில் நடக்கும் அரசியல் மாற்றம் குறித்து அவர்கள் விவாதம் செய்ய இருக்கிறார்கள். அதற்கு மத்தியில் ராஜபக்சே தமிழ் தேசியக் கூட்டமைபின் உறுப்பினர்களை சந்தித்துள்ளார்.
அவர்கள் இலங்கையின் அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் ஆதரவு அளிக்கும்படி ராஜபக்சே கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.
இலங்கையில் நாடாளுமன்றத்தில் மொத்த இடங்கள் 225 உள்ளது. இதில் ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி 106 இடங்களை கொண்டுள்ளது. அதிபர் சிறிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 96 இடங்களை கொண்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு 16 இடங்களை கொண்டுள்ளது.
இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு அளிக்கும் கட்சி மெஜாரிட்டியை நிரூபிக்க முடியும் என்பதால் அவர்களின் ஆதரவை ராஜபக்சே கேட்டு இருப்பதாக தகவல்கள் வருகிறது.