"கச்சத்தீவு விவகாரம்.." உள்ளே வரும் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான்.. பரபர பேச்சு.. என்ன சொன்னார்
கொழும்பு: கச்சத்தீவு விவகாரம் இப்போது மீண்டும் மிகப் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பாக இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் சில பரபர விளக்கங்களைக் கொடுத்துள்ளார்.
காலங்காலமாக இந்தியாவுக்குச் சொந்தமாக இருந்த கச்சத்தீவு 1974ஆம் ஆண்டில் இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டது. கடந்த சில நாட்களாக மீண்டும் இந்த கச்சத்தீவு விவகாரம் பேசுபொருள் ஆகி இருக்கிறது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக ஆர்டிஐ மூலம் பெற்ற தகவல்களைப் பகிர்ந்து இருந்தார். இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடியும் கூட நேரடியாக எக்ஸ் பக்கத்தில் விமர்சித்து இருந்தார்.
கச்சத்தீவு விவகாரம்: இதற்கிடையே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இது குறித்து சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். காங்கிரஸ் செயல்பாடுகளாலேயே கச்சத்தீவு இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டதாக அவர் சாடினார். மேலும், இது அப்போது தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்த திமுகவுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை என்றும் இது குறித்து மாநில அரசுக்குத் தேவையான தகவல்கள் பகிரப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்த விவகாரத்தில் காங்கிரஸ்- திமுகவைக் கடுமையாகச் சாடினார். மத்திய அரசு கச்சத்தீவை மீட்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே இந்த கச்சத்தீவு விவகாரம் குறித்து இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் விளக்கம் அளித்துள்ளார்.
ஜீவன் தொண்டமான்: கச்சத்தீவு விவகாரம் குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் இந்தியா அனுப்பவில்லை என்று ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். மேலும், கச்சத்தீவை மீண்டும் ஒப்படைப்பது குறித்து இந்தியாவிடம் இருந்து எந்தவொரு கோரிக்கையும் வரவில்லை என்று தெரிவித்த அவர், ஒருவேளை கச்சத்தீவு குறித்து கோரிக்கை வந்தால், அதற்கு இலங்கை வெளியுறவுத் துறை பதில் அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், இலங்கையைக் கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது என்றும் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
அமைச்சர் ஜெய்சங்கர்: முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், "முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஸ்வரன் சிங் 1974ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கச்சத்தீவு விகாரம் குறித்து விளக்கம் அளித்து இருந்தார். அதை இங்கே நான் பகிர விரும்புகிறேன். 1974இல் ஒப்பந்தம் முதலில் கையெழுத்தான போது புனித யாத்திரை, மீன்பிடி உரிமைகள் ஆகியவை எதிர்காலத்திற்காக முழுமையாகப் பாதுகாக்கப்பட்டும் என்றே கூறியிருந்தார்.
அதேநேரம் 2 ஆண்டுகளில் 1976இல் இரு தரப்பிற்கும் இடையே மற்றொரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் இரு நாடுகளாலும் தங்களுக்கான பிரத்தியேக பொருளாதார மண்டலங்களை நிறுவலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்திய மீனவர்கள் இதுவரை மீன்பிடித்து வந்த பாரம்பரிய பகுதிகள், கடல் பகுதி மற்றும் இலங்கையின் பிரத்தியேக மண்டலத்தில் நுழையக்கூடாது என்றே அந்த ஒப்பந்தத்தில் இருந்ததது.
அதாவது மீன்பிடிக்கும் உரிமையை 1976இல் வாபஸ் பெற்றுள்ளனர். அப்போது இருந்த காங்கிரஸ் அரசின் அலட்சியமான போக்கே இதற்குக் காரணம். இந்த விவகாரம் குறித்து தமிழக அரசுக்குத் தெரியாது என்று சொல்வதை ஏற்க முடியாது. மத்திய அரசு இது குறித்து தகவல்களைத் தமிழக அரசிடம் பகிர்ந்தே வந்தது ஆவணங்களில் தெரிய வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications