இலவசம்.. இந்தியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இலங்கை.. ஆறு நாடுகளுக்கு விசா ஃப்ரீ ஃப்ரீ
கொழும்பு: பெரும் கடனில் சிக்கியுள்ள இலங்கை, சுற்றுலாத் துறையை மீட்டெடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட ஆறு நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இலவச சுற்றுலா விசா வழங்கும் கொள்கைக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி கூறினார்.
இலங்கை நாடு மிகப்பெரிய அளவில் கடனில் சிக்கி உள்ளது. கொரோனா லாக்டவுன் அந்நாட்டின் பொருளாதாரத்தையே புரட்டிப் போட்டது. சுற்றுலா, தேயிலை, மீன் பிடி தொழில், விவசாயம் ஆகியவை பிரதானமாக இருந்தது. சுற்றுலா தொழில் கொரோனா காலக்கட்டத்தில் முற்றிலும் முடங்கியது. இதேபோல் லாக்டவுன் காரணமாக மீன்பிடி தொழிலும் எழுச்சி பெறவில்லை.

தேயிலை விலை வீழ்ச்சி. விவசாயத்தில் ஆர்கானிக் என எல்லா பக்கமும் இலங்கை நெருக்கடிக்கு தள்ளப்பட்டதால் மொத்தமாக முடங்கியது. இலங்கை நாடு அப்போது ஏற்பட்ட கடன் மற்றும் பொருளாதார பிரச்சனையில் இருந்து இன்று வரை மீண்டு வரவில்லை. கடனை குறைக்க சிக்கன நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதேநேரம் இலங்கை சுற்றுலாவை பெருக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இந்தியா உள்ளிட்ட ஆறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கை செல்ல விசா தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு உடனடியாக இலவச சுற்றுலா விசா வழங்குவதற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் மார்ச் 31, 2024 வரை செயல்படுத்தப்படும் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தரும் போது கட்டணம் இன்றி விசாவைப் பெற முடியும். குறிப்பாக இந்தியா பாரம்பரியமாக இலங்கையின் முதன்மையான சுற்றுலா சந்தையாக உள்ளது. இந்த அறிவிப்பின் பலனாக இந்தியாவைச் சேர்ந்த பலர் இலங்கைக்கு சுற்றுலா வருவார்கள் என்று அந்நாட்டு அரசு எதிர்பார்க்கிறது.
செப்டம்பர் மாத நிலவரப்படி இலங்கைக்கு சுற்றுலா வந்தவர்களில், 30,000 க்கும் மேற்பட்ட இந்தியர்களுடன் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. 8000 சுற்றுலா பயணிகளுடன் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புக்குப் பிறகு இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக சரிந்துள்ளது. ஈஸ்டர் குண்டுவெடிப்பில் 11 இந்தியர்கள் உட்பட 270 பேர் உயிரிழந்தனர். 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
1948 இல் இலங்கையிடம் சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து பார்த்தால், வரலாறு காணாத பொருளாதார சிக்கலில் இலங்கை சிக்கி தவித்து வருகிறது. கடந்த வருடம் அதிபர் ராஜபக்சேவின் பதவி விலகக் கோரி போராட்டக்காரர்கள் காரணமாக அரசியல் நிலையற்ற தன்மையும் ஏற்பட்டது. .
பொருளாதார நெருக்கடி காரணமாக, உணவு, மருந்து, சமையல் எரிவாயு மற்றும் பிற எரிபொருள், கழிப்பறை காகிதம் மற்றும் தீப்பெட்டிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் கடுமையான பற்றாக்குறையும் அப்போது ஏற்பட்டது. இலங்கை முழுக்க பெட்ரோல் டீசலுக்காவும், சமையல் எரிவாயு வாங்குவதற்காகவும் கடைகளின் வெளியே பல மணிநேரம் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கும் அப்போது தள்ளப்பட்டனர். அந்த நெருக்கடி மெல்ல மெல்ல குறைந்தது. இந்நிலையில் சுற்றுலாத் துறையை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் தற்போது இலங்கை தீவிரமாக இறங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications