இலங்கை குண்டு வெடிப்பு வழக்கில் அதிரடி.. முன்னாள் பாதுகாப்பு துறை செயலாளர், காவல்துறை தலைவர் கைது
கொழும்பு: ஈஸ்டர் தினம் ஏப்ரல் 21ம் தேதி, இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் சுமார், 258 பேர் உயிரிழந்தனர். ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றிருந்தது.
உலகையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து, சி.ஐ.டி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போதைய பாதுகாப்பு துறை செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் இலங்கை காவல்துறை தலைவர் புஜித் ஜெயசுந்தரா ஆகியோர் தாக்குதலை தடுப்பதில், தோல்வியடைந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து அவர்கள் பதவிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டன. குறிப்பாக, கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டார் புஜித் ஜெயசுந்தரா.
இருவரும் மருத்துவ சிகிச்சையை காரணம் காட்டி, சிஐடி விசாரணைக்கு ஆஜராக மறுத்து வந்தார். இதையடுத்து நரஹென்பிட்டாவில் உள்ள காவலர்களுக்கான மருத்துவமனைக்கு இன்று சென்ற, போலீசார், புஜித்தை கைது செய்தனர். ஹேமசிறியை தேசிய மருத்துவமனையிலிருந்து கைது செய்தனர்.
தாக்குதல் தொடர்பாக முன்கூட்டியே, இந்தியாவிலிருந்து உளவுத்துறை தகவல்கள் கிடைத்தும் கூட, உயர் அதிகாரிகள் அலட்சியமாக இருந்தது குறித்து விசாரிக்க அதிபரும், பாதுகாப்புத்துறை அமைச்சருமான சிறிசேனா மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்திருந்தார்.
ஜெயசுந்தேரா மற்றும் பெர்னாண்டோ இருவரும் தாக்குதல்கள் தொடர்பாக, நாடாளுமன்ற விசாரணைக் குழுவின் முன் சாட்சியமளித்துள்ளனர். அவர்கள் இருவரும் அச்சுறுத்தலின் தீவிரத்தை உளவுத்துறை தெரிவிக்கவில்லை என்று சாட்சியத்தில் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications