இலங்கை குண்டு வெடிப்பு, இனத்தை குறி வைத்து நடக்கவில்லை.. கிறிஸ்தவர்களே குறி: சுரேஷ் பிரேமச்சந்திரன்
Recommended Video
கொழும்பு: இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் என்பது, கிறிஸ்தவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று, இலங்கை முன்னாள் எம்பி சுரேஷ் பிரேமச்சந்திரன் ஒன் இந்தியாவுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்தவர்களின் புனித நாளான இன்று, இலங்கையில் மூன்று தேவாலயங்கள் உட்பட ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இது கிறிஸ்தவர்களை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று இலங்கை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் இன்று ஈஸ்டர் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை 8.45 மணியளவில், கொழும்பு, நீர் கொழும்பு மற்றும் மட்டக் களப்பு ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்கள் மற்றும் 3 நட்சத்திர ஹோட்டல்கள் ஆகிய இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப் பட்டுள்ளது.
இலங்கையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் 2 நாட்கள் விடுமுறை.. அரசு அவசர ஆலோசனை
நட்சத்திர ஹோட்டல்கள்
கொழும்பு புனித அந்தோணியார் தேவாலயம், கடலோர நகரான நெகோம்போ புனித செபாஸ்டியான் ஆலயம் மற்றும் பட்டிகலோவாவில் உள்ள ஆலயம் ஒன்றிலும் இந்த தாக்குதல்கள் நிகழ்த்தப் பட்டுள்ளன. இதேபோன்று ஷாங்கிரிலா, தி சின்னமோன் கிராண்ட் மற்றும் கிங்ஸ்பரி ஆகிய 3 ஓட்டல்களிலும் 3 குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.
சுரேஷ் பிரேமச்சந்திரன் பேட்டி
இந்த சம்பவத்தில் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். இந்த பலி எண்ணிக்கை உயர கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து நம்மிடம் பேசினார், இலங்கை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்.
முக்கியமான நாள்
சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியதாவது: இது வன்மையாக கண்டிக்கத் தக்கது. இன்று கிறிஸ்தவ மக்களை பொறுத்த மட்டில் மிக முக்கியமான தினம். அவர்கள் ஆலயத்தில் இறைவனை நோக்கி பிரார்த்தனை செய்ய சென்ற இடத்தில் இப்படிப் பட்ட ஒரு மோசமான சம்பவம் நடைபெற்றது என்பது வருத்தத்திற்கு உரியது. இது குறிப்பாக கிறிஸ்தவ மக்களை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது.
தமிழர்கள், சிங்களர்கள்
கொழும்பு மற்றும் நீர் கொழும்பு பகுதியில் தமிழ் மக்களும், சிங்களவர்களும் எந்த ஒரு இன பேதமும் இன்றி இறை வழிபாட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆகவே இந்த தாக்குதல் இன பாகுபாடு பார்த்து நடத்தப் பட்ட தாக்குதலாக தெரியவில்லை. அதே வேளையில் மட்டக்களப்பு பகுதியில் கொல்லப்பட்டதில் 26 பேர் தமிழர்கள். நீர் கொழும்பு மற்றும் கொழும்பு தேவாலயங்களில் கொல்லப்பட்டவர்களில் எத்தனை பேர் தமிழர்கள் எத்தனை பேர் சிங்களவர்கள் என்ற விவரம் தெரியவில்லை. அதற்கு இன்னும் ஓரிரு தினங்கள் ஆகலாம். தேவாலயங்கள் மட்டுமல்லாது நட்சத்திர ஹோட்டல்களிலும் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. தீவிரவதம் எந்த வகையில் வந்தாலும் அது வேரறுக்க பட வேண்டியது என்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.