இலங்கை படுகுழியில் விழ காரணம் இதுதான் - புதிய நிதியமைச்சர் அலி சாப்ரி என்ன சொல்கிறார்?
கொழும்பு: பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை இன்று, சர்வதேச நிதியத்திடம் 3 பில்லியன் டாலர் கடன் கேட்டு பேச்சுவார்த்தை மேற்கொள்ள உள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கணிக்கமுடியாத பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர் மின்வெட்டு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடுகள், மருந்து தட்டுப்பாட்டால் அந்நாட்டில் மக்கள் வாழ்வதே கேள்விக்குறியாகி இருக்கிறது.

தவறான பொருளாதார கொள்கை
இதனால் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசு கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. அரசு பொருளாதாரத்தை முறையாக கையாளவில்லை என்றும், தவறான பொருளாதார கொள்கைகளால் இந்த நெருக்கடி ஏற்பட்டுவிட்டதாகக்கூறி அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டு மக்களுக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கூட பணம் இன்றி அந்நாட்டு அரசு தத்தளித்து வருகிறது.

பணமின்றி தவிக்கும் இலங்கை
மேலும் அந்நிய செலாவணி கையிருப்பை தக்க வைக்க உலக நாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையையும் வழங்காமல் இலங்கை அரசு நிறுத்தி வைத்துள்ளது. இலங்கையின் அந்நிய செலாவணி மதிப்பு கடந்த 2 ஆண்டுகளில் 70 சதவீதத்துக்கும் மேல் குறைந்துவிட்டது. கடந்த மார்ச் மாதம் இலங்கையிடம் கையிருப்பில் உள்ள தொகை வெறும் 1.93 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே. இதன் மூலம் இலங்கையால் ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்களை கூட இறக்குமதி செய்ய முடியாது.
இதுகுறித்து ஜே.பி.மோர்கன் நிறுவனம் வெளியிட்டு தகவலில் இலங்கை இந்த ஆண்டு பெற்ற கடன் அளவு மட்டுமே 7 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது என்றும், அதன் பற்றாக்குறை சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார இழப்புக்கு என்ன காரணம்?
இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் கடனுக்காக கையேந்தி வருகிறது இலங்கை. அதேபோல் சர்வதேச நிதியத்திடம் கடன் கேட்டு இன்று பேச்சுவார்த்தையை இலங்கை தொடங்க இருக்கிறது. இதுகுறித்து அந்நாட்டில் புதிதாக பொறுப்பேற்ற நிதியமைச்சர் அலி சாப்ரி தெரிவிக்கையில், இலங்கையின் மத்திய வங்கி மற்றும் நிதித்துறை அதிகாரிகள் பிரச்சனையின் ஆழத்தை உணராமல் இருப்பதால் சர்வதேச நிதியத்தை அணுகவே தயக்கம் காட்டியதாக தெரிவித்துள்ளார்.

3 பில்லியன் டாலர் கடன்
தற்போது சர்வதேச நிதியத்திடம் 3 ஆண்டுகளுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடன் தொகையாக கேட்க இருப்பதாக அவர் கூறியுள்ளார். அதேபோல் உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்து கூடுதலாக ஒரு பில்லியன் டாலர்களை பெற்றுத்தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் சீரமைத்து, எரிபொருள், மருந்து உட்பட அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாட்டை குறைக்க அடுத்த 6 மாதத்திற்கு 3 பில்லியன் டாலர்கள் அவசியம் தேவை.












Click it and Unblock the Notifications