விஜய்யை ஒருமையில் பேசிய சீமானுக்கு சிக்கல்? சென்னை போலீஸ் கமிஷனரிடம் தவெக வழக்கறிஞர் புகார்
சென்னை: தமிழக முதல்வர் விஜய் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆகியோரை ஒருமையில் பேசி விமர்சனம் செய்ததை கண்டித்தும், அவதூறு பரப்புவதாக கூறியும் தவெக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த பெண் வழக்கறிஞர் அதிசயா சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழக முதல்வருமான விஜய்யை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் தான் சீமான் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெகவின் வழக்கறிஞர் பிரிவின் சார்பில் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. சீமான் மீது புகார் அளித்தது பற்றி அதிசயா என்ற வழக்கறிஞர் கூறியதாவது:
''நான், அதிசயா.. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர். தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் பிரிவின் காரணமாக நாங்கள் புகார் அளித்துள்ளோம். சீமான், மேடை பேச்சில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் பற்றியும் ஒருமையில் தரக்குறைவாக பேசி உள்ளார். இதனை வன்மையாக கண்டித்து சீமான் மீது புகார் அளித்துள்ளோம்.
கச்சத்தீவு பற்றி பேசும்போது மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் 'நோ கமெண்ட்ஸ்' என்று சொன்னதாக சீமான் கூறியிருக்கிறார். இத்தனை வருடமாக அரசியலில் பயணித்து கொண்டிருக்கும் சீமான், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல்வர் மற்றும் அமைச்சர்களையும் தரக்குறைவாக ஒருமையில் பேசி உள்ளார்.
இன்னொரு நிகழ்ச்சியில் பேசியபோது ஜோசப் விஜய் மொத்தம்69 படங்களில் நடித்துள்ளார். ஒரு படம் கூட நல்ல படம் இல்லை என்று பேசியிருக்கிறார். கேலியாகவும், கிண்டலாகவும் பேசி இருக்கிறார். நான் தம் அடிக்கிற ஸ்டைலை பார்த்து தனலட்சுமி விரும்பிச்சி என்று கேலியாக பேசியிருக்கிறார். சினிமாவை சினிமாவாக தான் பார்க்க வேண்டும். சினிமா வேறு. அரசியல் வேறு.
சீமான் சினிமா துறையில் தான் இருக்கிறார். ஜோசப் விஜய் முதலமைச்சராக ஆன பிறகு சீமானை மரியாதை நிமித்தமாக போய் பார்த்து வந்துள்ளார். அந்த அரசியல் நாகரீகம் கூட இல்லாமல் முதலமைச்சரை ஒருமையில் பேசி உள்ளது ஏற்க முடியாத விஷயம். ஜோசப் விஜய் முதலமைச்சரான பிறகு ஏராளமான நலத்திட்டங்களை செய்துள்ளார்.
உதாரணமாக 717 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. 200 யூனிட் இலவச மின்சாரம் கொடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு 50,000 வரை பயிர் கடன் வழங்கி உள்ளார். சிங்கப்பெண் அதிரடி படை உருவாக்கி உள்ளார். பருத்தி இறக்குமதியில் 11 சதவீதம் வரை வரி தள்ளுபடி செய்துள்ளார். ஆழமான கல்குவாரிகளுக்கு தடை விதித்துள்ளார். கோவில், ரேஷன்களில் ஊழல்களை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். அரசு மருத்துவமனையில் மின்விசிறி புதிதாக போட்டுள்ளார்.
கூட்டத்தில் மக்களை சிரிக்க வைப்பதற்காக மட்டுமே முதல்வர் விஜய், மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆகியோரை தரக்குறைவாக பேசியதை ஏற்க முடியாது. சீமான் மீது கமிஷனர் அலுவலகத்தில் அவதூறு பரப்புவதாக புகார் அளித்துள்ளோம். இனி வரும் காலங்களில் சீமான் இதுபோன்று நையாண்டி, நக்கலாக பேசுவதை தவிர்க்க வேண்டும். இந்த புகாருக்கு எங்களுக்கு சிஓபி வழங்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications