ஜனாதிபதி பதவி- ராஜினாமா கடிதத்தை அனுப்பாமல் ஏமாற்றிய கோத்தபாய- இலங்கை அரசியலில் பெரும் குழப்பம்!
கொழும்பு: இலங்கை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை தப்பி ஓடிய கோத்தபாய ராஜபக்சே இன்னும் கொடுக்காமல் இருப்பதால் இலங்கை அரசியலில் பெரும் குழப்பம் நிலவுகிறது.
Recommended Video
இலங்கையின் பொருளாதார பேரழிவை சீரமைக்க முடியாததால் மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கடந்த ஜூலை 9-ந் தேதி போராட்டத்தின் ஒரு பகுதியாக ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள் கைப்பற்றினர். அப்போது ஜனாதிபதி மாளிகையில் இருந்து கோத்தபாய ராஜபக்சே தப்பி ஓடிவிட்டார்.
இலங்கை கடற்படை, விமானப் படை பாதுகாப்பில் தஞ்சமடைந்திருந்த கோத்தபாய ராஜபக்சே, தாம் ஜூலை 13-ந் தேதிக்குள் ராஜினாமா செய்வேன் என அறிவித்தார். இது தொடர்பாக கடிதத்திலும் கையெழுத்திட்டுவிட்டதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அலுவலகத்துக்கும் கோத்தபாய தரப்பு தெரிவித்திருந்தது.
இதனிடையே இலங்கையில் இருந்து நேற்று அதிகாலை மாலத்தீவுக்கு கோத்தபாய ராஜபக்சே தப்பி ஓடிவிட்டார். இலங்கை விமானப் படையின் விமானத்தில் மாலத்தீவு தப்பினார் கோத்தபாய. அங்கிருந்து சிங்கப்பூர் சென்று பின்னர் துபாய் செல்லவும் கோத்தபாய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. மாலத்தீவு தலைநகர் மாலேயில் கோத்தபாயவை உடனே வெளியேற்ற வலியுறுத்தி இலங்கை மக்கள் போராட்டமும் நடத்தினர்.
கோத்தபாய ராஜினாமா செய்யாத நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு எதிரான போராட்டம் இலங்கையில் உக்கிரமடைந்தது. இலங்கை பிரதமர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர். பின்னர் நாடாளுமன்றத்தைக் கைப்பற்றும் முயற்சியிலும் ஈடுபட்டனர். இந்நிலையில் தற்காலிக ஜனாதிபதியாகவும் ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்று அவசரநிலை பிரகடனத்தை அமல்படுத்தினார்.
இதன்பின்னர் நேற்று மாலை இலங்கை அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா கூட்டினார். அக்கூட்டத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ராஜினாமா செய்ய வலியுறுத்தப்பட்டது. ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தபாய ராஜினாமா செய்யும் கடிதம் கிடைத்துவிடும் என்றும் சபாநாயகர் யாப்பா நம்பிக்கை தெரிவித்தார். ஆனால் தற்போது வரை கோத்தபாயவின் ராஜினாமா கடிதம் அனுப்பி வைக்கப்படவில்லை. அதேநேரத்தில் கோத்தபாய பெயரிலான சிறப்பு கெஜட் அறிவிப்பில், தற்காலிக ஜனாதிபதியாக ரணில் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தபாய பதவி விலகினால்தான், புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் நடைமுறைகள் தொடங்கப்படும்; பொதுமக்களின் கோபமும் சற்று தணியும். ஆனால் வெளிநாட்டுக்கு ஓடிப் போய்விட்ட கோத்தபாய, ராஜினாமா கடிதத்தை அனுப்பாமல் ஏமாற்றி வருவதால் இலங்கை அரசியலில் குழப்பம் தொடருகிறது. இதனால் தொடர்ந்து இலங்கையில் அசாதாரண சூழல் நிலவுகிறது.