இலங்கை அரசு டிவி ரூபவாஹினியை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்- திடீரென ஒளிபரப்பு இடைநிறுத்தம்!
கொழும்பு: இலங்கையில் அரசு டிவியான ரூபவஹானியை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர். இதனால் அதன் ஒளிபரப்பு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
இலங்கையில் ஜனாதிபதி மாளிகை தொடங்கி ஒவ்வொன்றாக போராட்டக்காரர்கள் கைப்பற்றி வருகின்றனர். ஜூலை 9-ந் தேதி கோத்தபாய ராஜபக்சேவின் மாளிகையை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர் போராட்டக்காரர்கள். கோத்தபாய இதுவரை அனுபவித்த வசதிகளை பொதுமக்கள் பகிரங்கப்படுத்தினர்.

கோத்தபாயவின் மாளிகைக்குள் அமைக்கப்பட்டிருந்த பதுங்கு குழிகள், அதில் பதுக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான பணம் ஆகியவையும் வெளிச்சத்துக்கு வந்தது. அதேபோல் ரணில் விக்கிரமசிங்கேவின் வீடும் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதையடுத்து கோத்தபாய ராஜபக்சே உயிர் தப்பினால் போதும் என இலங்கையை விட்டு இன்று ஓடிவிட்டார். அவருக்கு ரணில் விக்கிரமசிங்கே உதவியிருந்தார்.
இதனால் ரணிலுக்கு எதிராக இன்று நாடு கிளர்ந்தெழுந்துள்ளது. இன்று காலை முதல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அலுவலகம் முன்பாக உக்கிரமான போராட்டநடத்தப்பட்டு வருகிறது.
இப்போராட்டத்தை தடுக்க ராணுவம் குவிக்கப்பட்டது. ராணுவத்தினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். விமானப் படை ஹெலிகாப்டர்கள் மிக மிக தாழ்வாக பறந்து போராட்டக்காரர்களை எச்சரித்தது. ஆனாலும் பல்லாயிரக்கணக்கானோர் போராட்ட களத்தில் நிற்கின்றனர்.
Recommended Video
இதனிடையே இலங்கை அரசு ஊடகமான ரூபவாஹினையை போராட்டக்காரர்களில் ஒரு குழுவினர் இன்று கைப்பற்றினர். ரூபவாஹினி ஒளிபரப்பின் போது இடைமறித்து பேசிய போராட்டக்காரர்களில் ஒருவர், அரசு ஊடகம் நடுநிலைமையுடன் நடந்து கொள்ள வேண்டும் என எச்சரித்தார். இதன் பின்னர் ரூபவாஹினியின் ஒளிபரப்பு இடைநிறுத்தம் செய்யப்பட்டது. சிறிது நேரத்துக்குப் பின்னர் ரூபவாஹினி மீண்டும் ஒளிபரப்பை தொடங்கியது.












Click it and Unblock the Notifications