முடங்கியது இலங்கை- பொதுமக்களுக்கு 2 வாரத்துக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய அதிரடி தடை அமல்!
கொழும்பு: இலங்கையில் தனிநபர்களுக்கு 2 வாரங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை திங்கள்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களை வாங்க முடியாத அவலநிலை உள்ளது. இலங்கையின் எரிபொருட்கள் தேவைக்கு இந்தியா உதவி வருகிறது.

இலங்கையில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களைப் பெறுவதற்காக பல நாட்கள், பல மணிநேரம் நீண்ட வரிசைகளில் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த நிலையில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விற்பனையில் கடும் கட்டுப்பாடுகளை இலங்கை அரசு அமல்படுத்தி உள்ளது.
இலங்கையில் 2 வார காலத்துக்கு சுகாதாரம், பாதுகாப்பு, மின்சாரம் மற்றும் ஏற்றுமதி என அத்தியாவசியப் பணிகளுக்குதான் பெட்ரோல், டீசல் விநியோகிக்கப்படும். தனியார் வாகனங்கள் எதற்கும் பெட்ரோல், டீசல் வழங்கப்படமாட்டாது. இந்த தடை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதனால் இலங்கை ஒட்டுமொத்தமாக வீடுகளுக்குள் முடங்கும் நிலைமை உருவாகி உள்ளது. அதேபோல் அரசாங்கமும் இலங்கை மக்கள் அனைவரும் வீடுகளில் இருந்தே பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை
இதனிடையே இந்தியாவிடம் இருந்து பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் ஆகியவற்றை பெறுவது தொடர்பாக இலங்கை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. டெல்லியில் இந்தியாவுக்கான இலங்கை தூதர் மிலிந்த மொரகொட, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
இலங்கையில் எரிபொருட்களுக்கான தேவை; இலங்கையில் பொதுமக்களுக்கு எரிபொருட்களை விநியோகம் செய்வது தடை செய்யப்பட்டிருப்பது உள்ளிட்டவை குறித்து இச்சந்திப்பில் இலங்கை சார்பாக விளக்கப்பட்டிருக்கிறது. அவசர கால உதவியாக இந்தியா எரிபொருட்களை வழங்கவும் இலங்கை வலியுறுத்தியது.












Click it and Unblock the Notifications