அவ்வளவு செஞ்சும்... ரஷ்யா பக்கம் செல்லும் இலங்கை.. இந்தியா ஷாக்.. காரணம் என்ன
கொழும்பு: இலங்கையில் இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசியே பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுமார் 70 லட்சம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு இலங்கை ஆர்டர் கொடுத்துள்ளது.
உலக நாடுகளில் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அனைத்து நாடுகளும் வேகப்படுத்தியுள்ளன. இருப்பினும், உலக நாடுகளின் தேவைக்கு ஏற்ப பைசர், மாடர்னா போன்ற தடுப்பூசிகளின் உற்பத்தி இருப்பதில்லை.
இந்நிலையில், ஜனவரி மாத இறுதியில் நட்பு ரீதியாக சுமார் 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளை இலங்கைக்கு இந்தியா இலவசமாக வழங்கியது. அதைத்தொடர்ந்தே தடுப்பூசி செலுத்தும் பணிகளை இலங்கை தொடங்கியது.
ரஷ்யாவுக்கு ஆர்டர்
சுமார் 2.18 கோடி மக்கள் தொகையை கொண்ட இலங்கையில் இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசியே பெரும்பாலும் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் ரஷ்யாவிடம் இருந்து 70 லட்சம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளைப் பெற இலங்கை ஆர்டர் கொடுத்துள்ளது.
ஸ்புட்னிக் வி தடுப்பூசி
6.9 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள இந்தத் திட்டத்திற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு இதுவரை உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லை. இருப்பினும், 39 நாடுகள் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் அவசரக்கால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளன.
காரணம் என்ன
விலை குறைவு, தடுப்பாற்றல் அதிகம், ஆர்டர்கள் விரைவில் டெலிவரி செய்யப்படுவதால் பெரும்பாலான வளரும் நாடுகள் ஸ்புட்னிக் வி தடுப்பூசியைப் பெற விரும்புகின்றன. மேலும், கோவிஷீல்டு தடுப்பூசியை எடுத்துக்கொள்வதால் ரத்த உறைதல் பிரச்னை வருவதாகவும் சில ஐரோப்பிய நாடுகள் தற்காலிக தடை விதித்துள்ளன. இலங்கை ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு ஆர்டர் கொடுத்ததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
தடுப்பூசி செலுத்தும் பணிகள்
இலங்கையில் ஏற்கனவே கோவிஷீல்டு தடுப்பூசியின் அவசரக்கால பயன்பாட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது. சமீபத்தில் தான் ஸ்புட்விக் வி, சீனாவின சினோபார்ம் தடுப்பூசிக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இலங்கையில் தற்போது வரை 8.40 லட்சம் பேருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.