அடிபணிந்த கோத்தபய ராஜபக்சே.. இலங்கையில் அவசர நிலை பிரகடனம் வாபஸ்.. இரவோடு இரவாக என்ன நடந்தது?
கொழும்பு: இலங்கையில் நிலவி வந்த அவசர நிலை பிரகடனம் வாபஸ் பெறப்பட்டது. அதிபர், பிரதமருக்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில் அவசர நிலை பிரகடனம் வாபஸ் பெறப்பட்டது.
இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்கள் போராட்டம் செய்து வருகிறார்கள். கடந்த 2 மாதமாக நடந்து வரும் போராட்டம் 2 வாரமாக தீவிரம் அடைந்துள்ளது.
கடந்த ஏப்ரல் 1ம் தேதி இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே வீடு முன் திரண்டு மக்கள் போராட்டம் செய்தனர். இதனால் இலங்கை முழுக்க பல்வேறு பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டது.

ராணுவம் குவிப்பு
இந்த நிலையில்தான் மக்களின் போராட்டங்களை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. பொதுவாகவே இலங்கையில் அதிபருக்கு உச்சபட்ச அதிகாரம் உள்ளது. அதிபர் நினைத்தால் ஆட்சியை கலைக்க முடியும். இந்த நிலையில் அவசர நிலை காரணமாக, அவரால் ராணுவத்தை எங்கும் குவிக்க முடியும். யார் மீதும் துப்பாக்கி சூடு நடத்த முடியும்.

ராஜபக்சே
அதோடு இலங்கையில் சனிக்கிழமை முதல் திங்கள் கிழமை அதிகாலை அவரை கடுமையான ஊரடங்கும் போடப்பட்டது. ஆனால் இந்த கட்டுப்பாடுகள் எதுவும் பலன் அளிக்கவில்லை. தொடர்ந்து மக்கள் சாலையில் இறங்கி கடுமையான போராட்டங்களை மேற்கொண்டனர். முக்கியமாக அதிபர் கோத்தபய, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் வீடுகளுக்கு முன் மக்கள் தீவிரமான போராட்டங்களை நடத்தி வந்தனர். மக்களின் கடுமையான அழுத்தம் காரணமாக இலங்கையின் மொத்த அமைச்சரவையும் ராஜினாமா செய்துள்ளது.

ராஜினாமா
அதோடு புதிதாக அறிவிக்கப்பட்ட இலங்கையின் இடைக்கால அமைச்சர்களும் அங்கு ஆட்சி அதிகாரத்தில் நீடிக்க விரும்பவில்லை. இலங்கையின் புதிய நிதி அமைச்சர் அலி சப்ரி ராஜினாமா செய்துள்ளார். பதவியேற்ற 24 மணி நேரத்திற்குள் நிதி அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்தார் அலி சப்ரி. அங்கு ஆளும் ஶ்ரீ லங்கா பொதுஜன சுதந்திர கூட்டமைப்பிற்கு 145 இடங்கள் வரை உள்ளன. ஆனால் கூட்டணி கட்சிகள் அங்கு ஆளும் தரப்பிற்கு ஆதரவை வாபஸ் வாங்கி வருகின்றன.

மக்கள் போராட்டம்
அங்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகும் வரை போராட்டம் நிற்காது என்றே தோன்றுகிறது. ஏற்கனவே அங்கு 40+ எம்பிக்கள் ஆளும் தரப்பிற்கு ஆதரவை வாபஸ் வாங்குவதாக தெரிவித்துள்ளதால் பிரதமர் கோத்தபய ராஜபக்சேவின் ஆட்சியே முடிவிற்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதோடு அதிபர் பதவியையே நீக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுக்க தொடங்கி உள்ளன.

நேற்று இரவு முடிவு
இந்த நிலையில்தான் இலங்கையில் நிலவி வந்த அவசர நிலை பிரகடனம் வாபஸ் பெறப்பட்டது. அதிபர், பிரதமருக்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில் அவசர நிலை பிரகடனம் வாபஸ் பெறப்பட்டது. நேற்று இரவு இந்த முடிவு எடுக்கப்பட்டது. நேற்று இரவே இந்த அவசர நிலை வாபஸ் உடனடியாக அமலுக்கு வந்தது. அவசர நிலை மூலம் மக்களை கட்டுப்படுத்த முடியவில்லை, மாறாக எதிர்ப்புதான் அதிகரிக்கிறது என்பதால் அதை கோத்தபய ராஜபக்சே வாபஸ் வாங்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications