பாகுபலி பட வில்லன் பல்வால்தேவன் சிலை போல ராஜபக்சே சிலையை உடைத்த இலங்கை மக்கள்
இலங்கை அதிபர் கோத்தபாய, முன்னாள் பிரதமரும் தப்பி ஓடியவருமான மகிந்த ராஜபக்சே ஆகியோரது தந்தை டி.ஏ.ராஜபக்சேவின் முழு உருவ சிலையை சிங்களர்கள் தகர்த்து நடுவீதியில் வீசி எறிந்துள்ளனர்.
கொழும்பு: பாகுபலி படத்தில் வில்லனின் பிரம்மாண்ட தங்க சிலையை மக்கள் ஆவேசத்தோடு உடைத்து எறிந்து வீசுவார்கள். அதுபோல ஆவேசமான காட்சிகள் இலங்கையில் அரங்கேறியுள்ளன. இலங்கை அதிபர் கோத்தபாய, முன்னாள் பிரதமரும் தப்பி ஓடியவருமான மகிந்த ராஜபக்சே ஆகியோரது தந்தை டி.ஏ.ராஜபக்சேவின் முழு உருவ சிலையை சிங்களர்கள் தகர்த்து நடுவீதியில் வீசி எறிந்துள்ளனர்.
குடும்ப அரசியல் எப்படி நாட்டை சீரழித்தது... ஆள்பவர்களுக்கு எதிராக மக்கள் கொதித்து எழுந்தால் என்ன நடக்கும் என்பதற்கு இப்போது இலங்கையில் நடக்கும் காட்சிகளே சாட்சிகளாக உள்ளது.
இலங்கையில் ஆரம்பத்தில் இரண்டு கட்சிகள்தான் பிரதானமானவை, அவை ஐக்கிய தேசிய கட்சி, இலங்கை சுதந்திர கட்சி ஆகியவைதான். இலங்கை சுதந்திர கட்சியின் தலைவர் பண்டாரநாயகாவின் ஆட்சிக்காலத்தில்தான் இலங்கையில் சிங்களம் மட்டுமே தேசிய மொழி, பவுத்தம் மட்டுமே தேசிய மதம் என இன, மத அரசியல் கூர்மைப்படுத்தப்பட்டது, அதற்கு சட்டவடிவமும் கொடுத்தார்.
தந்தை ராஜபக்சே சிலையை உடைத்து வீதியில் வீசிய சிங்களர்- கண்டதும் சுட்டுக் கொல்ல கோத்தபாய உத்தரவு
டி.ஏ.ராஜபக்சே
இந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர்தான் டி.ஏ.ராஜபக்சே, இவர்தான் மகிந்த ராஜபக்சேவின் தந்தை. 1945 ஆம் ஆண்டு அம்பாந்தோட்டையில் பிறந்த மஹிந்த ராஜபக்சே, ஆரம்ப காலம் தொட்டே அரசியலில் ஆர்வத்துடன் பங்கேற்றார், தந்தையின் தேர்தல் பிரச்சாரங்களிலும் தீவிரம் காட்டினார். தந்தையின் மறைவுக்கு பின்னர் மஹிந்த ராஜபக்சே அரசியலுக்கு வந்தார். அவர் 1970இல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார், அரசியலில் இருந்தவாறே 1977இல் சட்டப்படிப்பையும் முடித்தார்.
தொடர் தோல்விகள்
தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த ராஜபக்சே திடீரென 1978இல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவினார், அதன்பின்னர் தொடர்ச்சியாக மகிந்த ராஜபக்சேவுக்கு தோல்வி முகம்தான். அந்த காலகட்டத்தில் வழக்கறிஞராக முனைப்புடன் பணியாற்றினார் மகிந்த ராஜபக்சே.
அமைச்சரான மஹிந்த ராஜபக்சே
கடந்த 1989ஆண்டில் நடந்த தேர்தலில் வெற்றியடைந்தார் இவர், பின்னர் 1994 தேர்தலிலும் வென்று சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான மக்கள் முன்னணி ஆட்சியில் தொழிலாளர் துறை அமைச்சராகவும், பின்னர் மீன்வளத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.சந்திரிகாவின் காலகட்டத்தில்தான் விடுதலைப்புலிகளுடன் பல முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது, ஆனால் அவை தோல்வியிலேயே முடிந்தன. பின்னர் 2002 இல் எதிர்க்கட்சி தலைவராகவும், பிறகு 2004ம் ஆண்டு இலங்கையின் 13வது பிரதமராகவும் பதவியேற்றார்.
மஹிந்த ராஜபக்சே வெறியாட்டம்
1994இல் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் இருந்தே தமிழர்கள் மற்றும் விடுதலைப்புலிகள் மீதான எதிர்ப்பை தீவிரப்படுத்த தொடங்கினார். கடந்த 2005 ஆம் ஆண்டு அதிபர் பதவிக்கு போட்டியிட்டார் மகிந்த, அவருக்கு எதிராக ரணில் விக்ரமசிங்கே களமிறங்கினார். ஆனால் இந்த தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்தது விடுதலைப்புலிகள் அமைப்பு. இதன் காரணமாக இத்தேர்தலில் மிக சொற்பமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் ராஜபக்சே.
கொலைவெறி தாக்குதல்
இலங்கையில் 6வது அதிபராக 2005இல் பொறுப்பேற்ற மஹிந்த ராஜபக்சே, ஏற்கனவே இலங்கையில் கூர்மையடைந்திருந்த இன பாகுபாட்டை மேலும் கூர்தீட்டினார். இதன் தொடர்ச்சியாக இலங்கையில் விடுதலைப்புலிகள் மீதான போர் தீவிரமடைந்தது, இந்த போரில் தமிழர்களும் கொத்துக்கொத்தாக உயிரிழந்தனர். பள்ளிகள், மருத்துவமனைகள், கோயில்கள் என அனைத்து இடங்களிலும் குண்டுகள் வீசப்பட்டன. கொத்து கொத்தாக இலங்கையில் வசித்த தமிழர்கள் கொல்லப்பட்டனர். 2009ஆம் ஆண்டு மே மாதம் போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.
பிரதமரான மஹிந்த ராஜபக்சே
2015இல் சர்வதேச அழுத்தங்கள் காரணமாக சிறீசேனா, ரணில் விக்கிரமசிங்கே கூட்டணி இலங்கையில் ஆட்சிக்கு வந்தது. பிறகு சிறீசேனா - ரணில் கருத்துவேறுபாடு காரணமாக ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு ராஜபக்சே 2018இல் திடீரென இலங்கையின் பிரதமரானார், பின்னர் நீதிமன்றத்தால் அது செல்லாது என அறிவிக்கப்பட்டதால் அவர் பதவி விலகினார்.
குட்டிச்சுவராக்கிய குடும்ப அரசியல்
ஆரம்பம் முதலே இலங்கை சுதந்திர கட்சியில் இருந்துவந்த மஹிந்த ராஜபக்சே, 2018ஆம் ஆண்டு அந்த கட்சியை உடைத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எனும் புதிய கட்சியை உருவாக்கினார். மேலும், இவர் அரசியலில் இருந்தபோது இவரது தம்பிகள் கோத்தபாய ராஜபக்சே, பசில் ராஜபக்சே ஆகியோரை அரசியலில் அமைச்சர் உள்ளிட்ட உயர்பதவிக்கு கொண்டு வந்தார். 2019இல் நடந்த பொதுத்தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று பிரதமரானார் மஹிந்த ராஜபக்சே. மஹிந்த ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சே இலங்கையின் அதிபர் பதவியை வகிக்கிறார். மற்றொரு தம்பி பசில் ராஜபக்சே இலங்கையில் அமைச்சராக உள்ளார், ராஜபக்சேவின் மற்றோரு தம்பியான சமல் ராஜபக்சேவும் இலங்கையின் பாசனத்துறை அமைச்சராக உள்ளார் அவரின் மகன் நாமல் ராஜபக்சேவும் அமைச்சராக உள்ளார்.
கொதித்தெழுந்த மக்கள்
ராஜபக்சே குடும்பத்தை சேர்ந்த மேலும் பலரும் அரசியல் மற்றும் அதிகார பதவிகளில் கோலோச்சுவதால் சிங்கள மக்களே இப்போது கொந்தளிப்பில் உள்ளனர். இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணம் ராஜபக்சே குடும்பத்தின் 20 ஆண்டுகால ஊழல் அரசியல்தான் என்பது அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களின் ஆதங்கமாகும். எனவேதான் கோத்தபாயவும், மஹிந்தாவும் நாட்டை விட்டு ஓட வேண்டும் என்று மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தை வன்முறையாக மாற்றியது மஹிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள்தான்.
Recommended Video
ராஜபக்சே சிலை உடைப்பு
மக்களின் கோப நெருப்பு இலங்கையை சுட்டெரித்துள்ளது. பற்றி எரிகிறது இலங்கை.. கோத்தபாய, மஹிந்தாவின் தந்தை ராஜபக்சேவின் நினைவு ஸ்தூபியை உடைத்தெரிந்த மக்கள் சிலையையும் உடைத்து சுக்குநூறாக வீசியுள்ளனர். பாகுபலி படத்தில் வில்லனாக வரும் பல்வால்தேவன் தங்க சிலையை மக்கள் உடைத்து வீசுவார்கள். சிலையின் தலை தனியாக துண்டிக்கப்பட்டு ஆற்றில் மிதந்து செல்லும் அதுபோல ராஜபக்சேவின் சிலை உடைக்கப்பட்டுள்ளது. குடும்ப அரசியலால் ஒரு நாடு எப்படி குட்டிச் சுவரானது என்பதற்கு இலங்கையே சாட்சி. நாட்டின் வளத்தை விட தன் குடும்ப வளமே முக்கியம் என்று நினைத்த ஆட்சியாளர்கள் என்னபாடு பட்டார்கள் என்பதற்கு ராஜபக்சேவின் குடும்பம் படும் பாடு தற்போது உலகத்திற்கே உதாரணமாக உள்ளது.