இலங்கையில் இப்போது ரணில் கோகம போராட்டம்- எதிர்க்கட்சிகள் ஏற்க மறுப்பு- பிரதமராக நீடிப்பாரா?
கொழும்பு: இலங்கையின் திய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கேவுக்கு எதிராக 'ரணில் கோ கம' போராட்டம் நடத்துவோம் என்று கொழும்பு காலி முகத்திடலில் போராட்டம் நடத்துவோர் அறிவித்துள்ளனர். அத்துடன் கொழும்பு அலரிமாளிகை முன்பாக ரணிலுக்கு எதிராக இன்று காலை ஒரு குழுவினர் போராட்டமும் நடத்தினர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்ததற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரு இடத்தில் கூட ரணில் கட்சி ஜெயிக்கவும் இல்லை. அக்கட்சியின் நியமன எம்.பி. ரணில்தான். இலங்கை நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரே எம்.பி. ரணில்தான்.
இப்படி மக்களால் நிராகரிக்கப்பட்டவை எப்படி பிரதமராக ஏற்க முடியும் என்பது எதிர்க்கட்சிகளின் கேள்வி. இதேபோல் காலி முகத்திடல் மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கும் நோக்கில் எதிர்காலத்தில் 'ரணில் கோ கம' என்ற பெயரில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர். அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் வசந்த முதலிகே இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை காலை அலரி மாளிகைக்கு முன்பாக மக்கள் குழு ஒன்று கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதேபோன்று மாட வீதியில் தாக்குதல் நடத்தி தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு குழுவொன்று தயாராகி வருவதாக கொழும்பு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
இதனிடையே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நாளை சனிக்கிழமை சிறப்பு கலந்துரையாடலுக்கு முன்னாள் அமைச்சர்களை அழைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கலந்துரையாடலுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
மேலும் ரணில் தலைமையிலான புதிய அரசுக்கு ஆதரவளிப்பதில்லை என்றும் அமைச்சர் பதவிகளை ஏற்க மாட்டோம் என்றும் இலங்கை சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. தற்போது வரை 10-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ரணிலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் ரணில் விக்கிரமசிங்கே எத்தனை காலம் பதவியில் நீடிப்பார் என்பது கேள்விக்குறி என்கின்றனர் இலங்கை மூத்த பத்திரிகையாளர்கள்.