இலங்கை: வன்முறை: மகிந்த ராஜபக்சேவை கைது செய்க- ஜனாதிபதி கோத்தபாய பதவி விலகுக- சஜித் பிரேமதாச
கொழும்பு: இலங்கையில் அமைதி வழியில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது வன்முறை கும்பலை ஏவிவிட்ட முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவை உடனே கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துகிறது. மேலும் இந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று எதிர்க்க்ட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
Recommended Video
இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண கோரியும் இதற்கு பொறுப்பான ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக கோரியும் பொதுமக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கொழும்பு காலிமுகத்திடலில் கடந்த ஒரு மாத காலமாக அமைதி வழியில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இதனையடுத்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே இன்று ராஜினாமா செய்தார். அவர் பதவி விலகுவதற்கு முன்னதாக கொழும்பு காலிமுகத்திடலில் போராட்டம் நடத்தியவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டோர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்களே குண்டர்களை களமிறக்கி இந்த வன்முறையில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் பொதுமக்கள் ஒருங்கிணைந்து குண்டர்களைத் திருப்பி தாக்கி உள்ளாடைகளுடன் ஓட ஓட விரட்டினர்.
கொழும்பில் ராஜபக்சே கும்பல் நடத்திய இந்த கொடூர தாக்குதல் இலங்கை மக்களை பெரும் அதிர்ச்சி அடைய வைத்தது. இதனையடுத்து நாடு முழுவதும் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுகின்றன. மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்களும் பொதுமக்களால் தாக்கப்படுகின்றனர்.
இதனிடையே அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய முதல் குற்றவாளி மகிந்த ராஜபக்ச என்பதால் அவரை உடனடியாக கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு காவல்துறை அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி உள்ளிட்ட அரசுபதவி விலகும் வரை ஐக்கிய மக்கள் சக்தி இனி வரும் காலங்களில் எந்த ஒரு கலந்துரையாடல் அல்லது வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ரஞ்சித், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய போது ஏன் சட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை? ராஜபக்ச அரசுக்கு எதிராக நாட்டு மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவார்கள். ராஜபக்சக்களை மீட்பதற்காகப் பயன்படுத்தப்படும் அவசரகாலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டத்திற்கு மக்கள் செவி சாய்க்க வேண்டாம் என்றார். இதனிடையே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்ட அறிக்கையில், இன்று நடைபெற்ற அனைத்துமே திட்டமிடப்பட்ட ஒரு நாடகம்தான். இந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம்.பி. சுமந்திரன் தமது ட்விட்டர் பக்கத்தில், தாக்குதல் நடத்தியவர்களை கொழும்புக்கு இன்று அழைத்து வந்து ஏற்பாடு செய்த முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
இதேபோல், நாட்டை கலவர பூமியாக கொண்டு வந்த முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை கைது செய்ய வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் வலியுறுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications