இலங்கை அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஜனாதிபதி பதவிக்கு சஜித் பிரேமதாச போட்டியிட தீர்மானம்
கொழும்பு: இலங்கை அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஜனாதிபதி பதவிக்கு சஜித் பிரேமதாச போட்டியிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே மக்களால் பதவியில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டார். இதனால் இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார் கோத்தபாய ராஜபக்சே.
அதேபோல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும் பதவி விலகுவதாக கூறினார். இலங்கையில் ஜனாதிபதி, பிரதமர் பதவிகள் காலியாக இருக்கும் விசித்திரம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தற்காலிக ஜனாதிபதி தேர்தல் ஜூலை 20-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பதவிக்கு யாரை போட்டியிட வைப்பது என்பது தொடர்பாக இலங்கை அனைத்து எதிர்க்கட்சிகள் (ஐக்கிய மக்கள் சக்தி) ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை போட்டியிட வைக்கும் தீர்மானத்தை ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் ஏகமனதாக அங்கீகரித்துள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான தீர்மானம் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்து மபண்டாரவினால் கொண்டுவரப்பட்டதுடன், பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவும் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு கூட்டம் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியுதீன், திகாம்பரம், மனோ கணேசன் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றதாக கொழும்பு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
இதனிடையே இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் தம்மை முன்னிறுத்த அண்டை நாடு ஒன்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஏற்கனவே பிரதமரானதே ஜனநாயக விரோதம்; இப்போது ஜனாதிபதியாக முயற்சிப்பதும் கேலிக்கூத்தானது எனவும் அந்த நாட்டின் தலைவர்கள் கடுமை காட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications