கோத்தபாய ராஜபக்சே உயிருக்கு ஆபத்து? ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக பரபரப்பு
கொழும்பு: இலங்கை தலைநகரில் தொடர்ந்து அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருபவர்களால் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சேவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து ஜனாதிபதி மாளிகையில் இருந்து அவர் அவசரமாக வெளியேற்றப்பட்டதாக சிங்கள ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
இலங்கையில் ஒவ்வொரு மாதம் 9-ந் தேதியும் ஏதேனும் ஒரு முக்கிய அரசியல் நிகழ்வு நடைபெற்று வருகிறது. ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிரான போராட்டங்கள் மார்ச் 9-ந் தேதி தொடங்கியது. அப்போது முதல் இலங்கையில் ஒவ்வொரு மாதமும் 9-ந் தேதி ஏதேனும் அரசியல் விபரீதம் நிகழ்கிறது. மகிந்த ராஜபக்சே பதவி விலகியதும் உயிருக்கு அஞ்சிய ஓடியதும் 9-ந் தேதிதான் நிகழ்ந்தது.
இந்நிலையில் நாளை 9-ந் தேதி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சேவின் அதிபர் மாளிகை முற்றுகையிட்டு உக்கிரப் போராட்டம் நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில் நாளைய போராட்டத்தால் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சேவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என உளவுத்துறை தகவல்கள் தெரிவித்தன; இதனடிப்படையில் கோத்தபாய ராஜபக்சே, ஜனாதிபதி மாளிகையில் இருந்து பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டார் என்கின்றன சிங்கள இணையதளங்கள்.
இதனிடையே கொழும்பில் இதுவரை இல்லாத வகையில் மிகப் பெரிய அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இலங்கை தலைநகர் கொழும்பில் 5,000க்கும் அதிகமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே காலிமுகத்திடலில் போராட்டம் நடத்தும் 'கோட்டா கோகம' குழுவினருடன் இணைந்து அனைத்து எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளும் தங்கள் குழுக்களை எந்த வன்முறை நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என்று கடுமையாக அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.