யாருக்கு ஆதரவு? ரணிலுக்கா, ராஜபக்சேவிற்கா? தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் முக்கிய முடிவு!
கொழும்பு: இலங்கையில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு நாளை முடிவு செய்ய உள்ளது.
முன்னாள் இலங்கை அதிபரான, ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா திடீரென பிரதமராக நியமித்ததோடு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவியை பறித்தார். இதையடுத்து நாடாளுமன்றத்தையும் முடக்கியுள்ளார்.
225 பேர் கொண்ட நாடாளுமன்றத்தில் ரணில் கட்சிக்கே அதிக உறுப்பினர் பலம் உள்ளது. ஆனால் எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை இல்லை.
[சிறிசேனா திடீர் பல்டி.. நாடாளுமன்ற முடக்கத்தை நீக்கினார்.. 5ம் தேதி கூடுகிறது! ]
எதிர்க்கட்சியாக உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட மற்ற சில கட்சிகளையும் இணைத்துக்கொண்டால்தான், ஆட்சியை தக்க வைக்க முடியும் என்ற நிலையில் ரணில் மற்றும் ராஜபக்சே உள்ளனர். இந்த நிலையில்தான், தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்மந்தனை சமீபத்தில், அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் ராஜபக்சே.
ராஜபக்சே பிரதமர் அலுவலகத்திற்கு சம்மந்தனை அழைத்ததாகவும், ஆனால், சம்மந்தன், அதை தவிர்த்துவிட்டு ராஜபக்சே அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு சென்றார். பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டதில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு உடன்பாடு இல்லை என்பதற்கான சமிக்ஞையாக இது பார்க்கப்பட்டது.
இந்த நிலையில்தான், சம்மந்தன் தலைமையில், நாளை, தமிழ் தேசிய கூட்டமைப்பு, எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் யாருக்கு ஆதரவு வழங்குவது என முடிவெடுக்க உள்ளதால் எதிர்பார்ப்பு நிலவுகிறது. சிறிசேனா&ராஜபக்சே கட்சிகளையடுத்து, 16 எம்.பி.க்களுடன் 3வது இடத்தில் உள்ளது தமிழர் தேசிய கூட்டமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.