ரஷ்யாவிலிருந்து வந்த கப்பல்... 90 நாட்களுக்கு பின் இயங்கும் இலங்கை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்
கொழும்பு: ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் கப்பல் வந்தடைந்ததால் இலங்கை சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இன்று மீண்டும் இயங்கத் தொடங்குகிறது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கணிக்கமுடியாத பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர் மின்வெட்டு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடுகள், மருந்து தட்டுப்பாட்டால் அந்நாட்டில் மக்கள் வாழ்வதே கேள்விக்குறியாகி இருக்கிறது.

பெட்ரோல் பங்கு உரிமையாளர்
இந்த நிலையில் அனுராதபுரத்தில் உள்ள இபாலொகாமா பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வாகன ஓட்டிகளுக்கு வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெட்ரோல் பங்கு உரிமையாளரின் வீட்டுக்கு தீ வைத்தனர். இந்த சம்பவத்தின்போது அதன் உரிமையாளர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வீட்டில் இருந்திருக்கிறார். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு காவல்துறையிடம் தெரிவித்திருக்கின்றனர்.

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கிய இலங்கை
பொருளாதார நெருக்கடியால் பிற நாடுகளிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யாமல் இருந்த இலங்கை, ரஷ்யாவிடம் இறக்குமதி செய்திருக்கிறது. 83,000 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யுடன் ரஷ்யாவின் நிஸ்சோஸ் டெலோஸ் என்ற சரக்கு கப்பல் இலங்கை துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளது. இதனை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லும் பணிகள் தொடங்கி இருக்கின்றன.

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம்
பொருளாதார தட்டுப்பாடு காரணமாக கச்சா எண்ணெய் வரத்து குறைந்ததால், இலங்கையின் ஒரே ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான சபுகஸ்கந்தாவில் கடந்த 90 நாட்களுக்கு முன் மூடப்பட்டது. இந்த நிலையில், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வந்துள்ளதால் மீண்டும் இன்று சுத்திகரிப்பு பணிகள் தொடங்க உள்ளன. இதனால் இலங்கையின் எரிபொருள் தட்டுப்பாடு ஓரளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் எண்ணெய் இருப்பு
மே 26 ஆம் தேதி நிலவரப்படி, இலங்கையில் 23,022 மெட்ரிக் டன் டீசல், 2,588 மெட்ரிக் டன் சூப்பர் டீசல், 7,112 மெட்ரிக் டன் 95 ஆக்டேன் பெட்ரோல், 39,968 மெட்ரிக் டன் 92 ஆக்டேன் பெட்ரோல் மற்றும் 3,578 மெட்ரிக் டன்
JETA1 விமான எரிபொருளானது இலங்கையிடம் கையிருப்பில் உள்ளது. அதாவது அடுத்த 2 வாரங்களுக்கான எரிபொருள் கையிருப்பு மட்டுமே இலங்கை வசம் உள்ளது.












Click it and Unblock the Notifications