தீ வைப்பில் அத்தனையும் நாசமானதே.. ரத்த கண்ணீர் வடிக்கும் ரணில்! ஜூலை 20-ல் புதிய ஜனாதிபதி தேர்தல்!
கொழும்பு: இலங்கையில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க ஜூலை 20-ல் வாக்கெடுப்பு நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கை ஜனாதிபதியாக இருந்த கோத்தபாய ராஜபக்சே, மக்கள் கிளர்ச்சியை தொடர்ந்து தாம் பதவி விலகுவதாக அறிவித்தார். தற்போது பிரதமராக உள்ள ரணில் விக்கிரமசிங்கேவிடம் இது தொடர்பாக இன்றும் உறுதி அளித்துள்ளார் கோத்தபாய ராஜ்பக்சே.
கொழும்பு ஜனாதிபதி மாளிகையை கைவிட்டு விட்டு தப்பி ஓடிய இலங்கை ராணுவத்தின் பாதுகாப்பில் தஞ்சமடைந்துள்ளார் கோத்தபாய. அவர் தமது குடும்பத்துடன் இலங்கையை விட்டு வெளியேறி செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து புதிய தற்காலிக ஜனாதிபதியை தேர்வு செய்யும் நடைமுறைகளை சபாநாயகர் தரப்பு மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக ஆலோசனைகள் நடத்தப்பட்டதன் முடிவில், ஜூலை 15-ந் தேதி புதிய ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கும்; ஜூலை 20-ந் தேதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாம்.
இதனிடையே தமது வீடு தீ வைத்து எரிக்கப்பட்டது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்கே உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளர். அதில் கூறியுள்ளதாவது: பொருளாதாரம் சீர்குலைந்த காரணத்தால் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டேன். பொருளாதாரத்தை மீட்டு எடுக்க 4 ஆண்டுகள் தேவைப்படும். ஜூலை 9-ந் தேதி போராட்டத்தின் போது தாக்குதல் நடத்தலாம் என்பதால் வீட்டை விட்டு வெளியேறுமாறு போலீசார் அறிவுறுத்தினர். அதனால் மனைவியுடன் வீட்டை விட்டு வெளியேறினோம்.
எனக்கு இருந்த ஒரே ஒரு வீடு இன்று தீக்கிரையாக்கப்பட்டது. அதில் அழிந்தவை என்னுடைய புத்தகங்கள். அதில் அரிய புத்தகங்கள், பழங்கால பொருட்கள் இருந்தன. அன்னியர் ஆட்சிக் காலத்து புத்தகங்களும் கூட எரிக்கப்பட்டுவிட்டன. பழங்காலத்து சித்திரங்களும் அதில் இருந்தன. விமலதர்மசூரிய மன்னன் ஒல்லாந்து தூதுவரை சந்தித்த 200 ஆண்டு பழமைவாய்ந்த ஒல்லாந்து சித்திரமும் இருந்தது. அத்தனையும் எரிக்கப்பட்டுவிட்டன என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications