அடுத்த அதிரடி.. இலங்கையில் புர்கா அணிய தடை விதித்தார் அதிபர் சிறிசேனா.. கோபத்தில் மக்கள்!
கொழும்பு: இலங்கையில் புர்கா அணிய தடை விதித்தார் அதிபர் சிறிசேனா. இதனால் முஸ்லிம் சமூகத்து மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
இலங்கையில் கடந்த 21-ஆம் தேதி தற்கொலை படை தாக்குதல் நடைபெற்றது. 8 இடங்களில் நடைபெற்ற இந்த தாக்குதலில் சிக்கி 360 பேர் பலியாகிவிட்டனர். இன்னும் 500 பேர் காயமடைந்தனர்.
உலகையே உலுக்கிய இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பின்புலத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

தேடுதல் வேட்டை
இந்த நிலையில் இலங்கையில் மேலும் நாசவேலைகளில் ஈடுபட 160 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக இலங்கை உளவுத்துறை அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளது. இதனால் மீண்டும் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க நாடு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.

சொத்துகள் முடக்கம்
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு முதலில் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டது. இதையடுத்து இலங்கையில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் ஜமியத்தே மில்லாது இப்ராஹிம் ஆகிய இரு அமைப்புகளையும் தடை செய்தும் அவர்களது அசையும், அசையா சொத்துகளை முடக்கவும் அதிபர் உத்தரவிட்டார்.

புர்கா தடை
இந்த நிலையில் இலங்கையில் மேற்கொண்டு தீவிரவாத தாக்குதல்களை தடுக்கும் விதமாக மற்றொரு உத்தரவை பிறப்பித்துள்ளார். இலங்கையில் நிக்காப் முக திரைகள், மாஸ்க்கள், புர்காக்கள் போன்றவற்றை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசு தலையிடுவது
இந்த தடை உத்தரவு மக்களை எளிமையாக அடையாளம் காண்பதற்கும் பாதுகாப்பு கருதியும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவை தடை செய்ததால் அச்சமூகத்தினர் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். ஏற்கெனவே இரு முறை இந்தியா எச்சரித்தும் அதை கோட்டைவிட்டு விட்டு தற்போது வாலை விட்டு தும்பை பிடிக்கும் கதையாக ஒரு சமூகத்துக்கு சடங்குகளில் அரசு தலையிடுவதை அம்மக்கள் கடுமையாக சாடியுள்ளனர்.












Click it and Unblock the Notifications