ராஜபக்ச சகோதரர் பசில் ராஜபக்ச ராஜினாமா.. எம்.பி பதவியில் இருந்து திடீர் விலகல்.. இதுதான் காரணமா?
கொழும்பு : இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் பசில் ராஜபக்ச தனது எம்.பி பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
இலங்கையின் முன்னாள் நிதி அமைச்சரான பசில் ராஜபக்சவின் அமைச்சர் பொறுப்பு பறிக்கப்பட்ட நிலையில், தற்போது எம்.பி பதவியை ராஜினாமா செய்துள்ளார் பசில்.
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரட்டை குடியுரிமை வைத்திருப்பதை தடை செய்ய சட்டதிருத்தம் நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கலாக உள்ளதன் காரணமாகவே, அவர் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.

இலங்கை பொருளாதார நெருக்கடி
நமது அண்டை நாடான இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் தவித்து வருகிறது. இதையடுத்து பல்வேறு இடங்களில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டங்கள் கடந்த மே மாதம் 9ஆம் தேதி வன்முறையாக மாறியது. அந்த வன்முறைகளில் எம்.பி உள்ளிட்ட சுமார் 10 பேர் உயிரிழந்தனர். 200ற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். நாடே தீ வைக்கப்பட்டு வன்முறைக் களமானது.

மகிந்த ராஜபக்ச
இதையடுத்து, பிரதமராக பதவி வகித்த மகிந்த ராஜபக்ச, தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, புதிய பிரதமராக பதவியேற்றார். சமீபத்தில் அவரே நிதி அமைச்சக பொறுப்பையும் ஏற்றார். இலங்கையின் பொருளாதார நிலையை மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

பசில் ராஜபக்ச
இந்நிலையில், இலங்கை முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடி முற்றியதால் நிதியமைச்சர் பொறுப்பில் இருந்து பசில் ராஜபக்சவை நீக்கினார் அதிபர் கோத்தபய ராஜபக்ச. இந்நிலையில் மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஒரு மாதத்தில் பசில் ராஜபக்சே எம்.பி பதவியில் இருந்து விலகியுள்ளார்.

அரசியலில் ஈடுபடுவேன்
இலங்கை நாடாளுமன்ற செயலாளரிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார் பசில் ராஜபக்ச. எம்.பி பதவியை ராஜினாமா செய்தது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பசில் ராஜபக்ச, இனி தாம் எந்த ஒரு அரசு நிர்வாக பதவியையும் வகிக்கப் போவதில்லை என்றும் ஆனால் தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவேன் தெரிவித்துள்ளார்.

காரணம் என்ன
பசில் ராஜபக்ச, தந்து எம்.பி பதவியை ராஜினாமா செய்ததற்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. அமெரிக்கா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளின் குடியுரிமையை வைத்திருப்பவர் பசில் ராஜபக்ச. இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரட்டை குடியுரிமை வைத்திருப்பதை தடை செய்ய சட்டதிருத்தம் நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கலாக உள்ளது. இந்நிலையில் தனது பதவியை பசில் ராஜபக்சே ராஜினாமா செய்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications