என் ஆதரவாளருக்கே சீட் இல்லையா? கடும் அதிருப்தியில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இன்றுடன் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடையும் நிலையில், காங்கிரஸ் கட்சி தலைமை நேற்று இறுதிகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில், முதலமைச்சர் அசோக் கெலாட்டின் நம்பிக்கைக்குரிய நபரான ராஜஸ்தான் சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவர் தர்மேந்திர ரத்தோருக்கு சீட் மறுக்கப்பட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. இம்மாநிலத்தில் மொத்தம் 200 தொகுதிகள் இருக்கின்றன. இந்நிலையில் மாநிலத்திற்கு வரும் 25ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் எப்படியாவது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. ஆனால், இம்மாநிலத்தில் இதுவரை எந்த ஒரு கட்சியும் இரண்டு முறை தொடர்ச்சியாக ஆட்சி அமைத்தது கிடையாது என்பது வரலாறு.

எனவே காங்கிரஸ் சற்று கலக்கத்தில் இருக்கிறது. இதற்கு காரணம் மாநிலத்தின் அரசியல் வரலாறு மட்டமல்ல, ராஜஸ்தான் காங்கிரஸில் சமீப காலமாக நடந்து வரும் சலசலப்புகளும்தான். முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக, காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் அடிக்கடி பஞ்சாயத்துக்களை இழுத்து வருகிறார். தற்போது தேர்தல் வேறு நெருங்கிவிட்டால் இந்த பஞ்சாயத்துக்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன.
இருவரும் தங்களின் நம்பிக்கைக்குரியவர்களுக்கு சீட் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கினர். இந்த சலசலப்புகளை சமாளித்து ஏற்கெனவே 6 கட்டமாக வேட்பாளர்களை கட்சி தலைமை அறிவித்த நிலையில், தற்போது 7வது மற்றும் இறுதிகட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டிருக்கிறது. இதில் 21 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. சோகம் என்னவெனில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அசோக் கெலாட்டின் நம்பிக்கைக்குரிய நபரான ராஜஸ்தான் சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவர் தர்மேந்திர ரத்தோருக்கு சீட் மறுக்கப்பட்டிருக்கிறது.
இதனால் அசோக் கெலாட் தரப்பு கடும் அதிருப்தியில் இருக்கிறது. தர்மேந்திர ரத்தோர் கடந்த காலங்களில் கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதால் தலைமையின் கண்டிப்புக்கு ஆளாகியிருந்தார். எனவேதான் இந்த முறை அவருக்கு சீட் வழங்கப்படவில்லை என்று தெரிய வருகிறது. அதேபோல மாநிலத்தில் கெலாட் தரப்புக்கு அதிக ஆதரவு இருந்தாலும், கட்சியின் தேசிய தலைமை சச்சின் பைலட்டை தான் முன்னிறுத்த விரும்புவதாகவும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
எனவே இதன் காரணமாக கூட ரத்தோருக்கு சீட் மறுக்கப்பட்டிருக்கலாம். இவருக்கு பதிலாக கோட்டா வடக்கு தொகுதியில் மாநில அமைச்சர் சாந்தி தரிவாலை கட்சி தலைமை நிறுத்தியிருக்கிறது. மாநிலத்தில் வரும் 25ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு டிசம்பர் மாதம் 3ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications