கிரிப்டோ கரன்சி முதலீடு: 300 பேரிடம் ரூ.4 கோடி மோசடி! விபூதி அடித்துவிட்டு எஸ்கேப்பான 2 பெண்கள் கைது
கடலூர்: கடலூரில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு என கூறி நூற்றுக்கணக்கானோரிடம் ஆசை காட்டி பணம் பெற்று ரூ. 4 கோடி மோசடி செய்த விவகாரத்தில் 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றிக் கொண்டேதான் இருப்பார்கள் என்பது மோசடி விவகாரங்களின் போதெல்லாம் மெய்ப்பிக்கப்படும் சொலவடை. அவ்வப்போது வெளியாகும் பண மோசடி புகார்களுக்கு எல்லாம், மூலம் குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையே.

அந்த வகையில் விரைவாக அதிக பணம் ஈட்ட விரும்புவோரை குறி வைத்து விபூதி அடித்துள்ளனர் 2 பெண்கள். கிரிப்டோ கரன்சியில் முதலீடு எனக் கூறி கடலூர் சுற்று வட்டாரத்தில் சுமார் 300 பேரிடம் பணம் பெற்று ரூ. 4 கோடி மோசடி செய்துள்ளனர் 2 பெண்கள்.
கும்பகோணத்தில் கிரிப்டோ கன்சல்டன்சி நிறுவனத்தில் தான் முகவராக உள்ளதாக கூறி சித்திரைப்பேட்டை ரெஜினா மோசடியில் ஈடுபட்டுள்ளார். கன்சல்டன்சி நிறுவன நிர்வாக அலுவலராக அர்ஜுன் கார்த்திக் என்பவர் உள்ளதாக கூறி ஏமாற்றியுள்ளார்.
ரூ. 1 லட்சம் முதலீடு செய்தால் 18 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ. 15000 கிடைக்கும், பிறகு அசல் பணத்தை திருப்பி அளிப்பார்கள் எனக் கூறி நம்ப வைத்து பணம் பெற்றுள்ளார் ரெஜினா. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பலர் முதலீடு செய்து அதிக லாபம் அடைந்துள்ளனர் எனக் கூறி ஆசை காட்டியுள்ளார் ரெஜினா.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் பலர் ரெஜினாவிடம் பணம் கட்டத் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு மாதம் தோறும் பணத்தை வழங்கி வந்துள்ளார் ரெஜினா. சரியாக பணம் வரவும், மேலும் பலர் அவரிடம் பணம் கட்டி வந்துள்ளனர்.
கடலூர் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த சுமார் 300 பேரிடம் ரூ. 4 லட்சம் கோடி முதலீடு பெற்ற பிறகு யாருக்கும் பணம் தராமல் இருந்துள்ளார். பணத்தை முதலீட்டாளர்கள் கேட்டதற்கு நிர்வாக இயக்குநரிடம் தான் கேட்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
கடந்த 2023 மே மாதம் முதல் அலுவலகத்தை பூட்டிவிட்டு ரெஜினா, சங்கீதா உள்ளிட்டோர் தலைமறைவாகியுள்ளனர். இதையடுத்து முதலீடு செய்தவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து பாரதி அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி சண்முகவேலன், இன்ஸ்பெக்டர் மஞ்சுளா பிரியா ஆகியோர் வழக்கு பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட ரெஜினா, சங்கீதா, அர்ஜூன் கார்த்திக், ஜலேந்திரன், சிந்து லாவண்யா ஆகியோரை தேடி வந்தனர்.
தலைமறைவாக இருந்த ரெஜினா, சங்கீதா ஆகியோர் புதுச்சேரியில் உள்ள வங்கிக்கு வந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் இருவரையும், முதலீடு செய்து ஏமாந்தவர்கள் சிலர் பார்த்துள்ளனர். அவர்கள் அந்த இருவரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். தற்போது ரெஜினா, சங்கீதா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பெரும்பாலும் இந்த மோசடியில் ஏழை, எளிய மக்கள், நடுத்தர மக்கள் தான் சிக்கியுள்ளனர். இவர்கள் தங்களது மருத்துவ சிகிச்சை, உயர் கல்வி போன்ற செலவுகளுக்காக சேமித்து வைத்த பணத்தை இந்த மோசடி கும்பலிடம் முதலீடு செய்து ஏமாந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications