கடலூர் அருகே அடுத்தடுத்து மாயமான இரு இளைஞர்கள் கொலை! விசாரணையில் திடுக்
கடலூர்: கடலூரில் அடுத்தடுத்து காணாமல் போன இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரையும் நண்பர்களே கொன்று புதைத்தது தெரியவந்தது.
கடலூர் மாவட்டம் எம்.புதூர் மற்றும் டி.புதூர் பகுதியைச் சேர்ந்த சரண்ராஜ், அப்புராஜ் ஆகிய 2 இளைஞர்கள் கடந்த மாத இறுதியில் காணாமல் போய்விட்டதாக அவர்களின் பெற்றோர் புகார் அளித்திருந்தனர்.

இந்த புகாரின் பேரில் கடலூர் திருப்பாதிரிபுலியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் கடந்த 20 நாட்களாக இந்த வழக்கில் எந்த துப்பும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் சரண்ராஜ், அப்புராஜ் ஆகியோரின் நண்பர்களுக்கு இந்த இளைஞர்கள் மாயமான விவகாரத்தில் தொடர்பிருப்பது போலீஸாருக்கு நேற்று தெரியவந்தது. இதையடுத்து நண்பர்கள் 5 பேரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அப்புராஜையும் சரண்ராஜையும் கொன்று புதைத்தது தெரியவந்தது. நெய்வேலி என்எல்சி அருகே பூமங்கலம் என்ற பகுதியில் இருவரும் புதைக்கப்பட்டதாக தகவல்கள் நண்பர்கள் விசாரணையில் தெரிவித்தனர்.
இதையடுத்து கடலூர் மாவட்டம் எஸ்பி ஜெயகுமார் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்குள்ள இருவரது உடல்களும் தோண்டியெடுக்கப்பட்டு வருகின்றன. கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இரு உடல்களும் தோண்டப்பட்டு அந்த பகுதியிலேயே பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications