இப்படியுமா நடக்குது.. வங்கியை இழுத்து பூட்டிய வாடிக்கையாளர்.. இஎம்ஐ மூலம் வண்டி வாங்குறீங்களா? உஷார்
கடலூர்: கடலூரில் இம்பீரியல் சாலையில் செயல்படும் தனியார் வங்கிக்கு உறவினர்களுடன் சென்ற வாடிக்கையாளர் ஒருவர் பூட்டு போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக பூட்டு போட்டார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
கடலூர் வண்டிப்பாளையத்தைச் சேர்ந்த நந்தகுமார் என்பவர் கடலூரில் இம்பீரியல் சாலையில் செயல்படும் தனியார் வங்கியில் இருசக்கர வாகனம் வாங்குவதற்காக வாகன கடன் வாங்கி உள்ளார். கடன் தொகையை முறையாக செலுத்தி வந்தாராம். ஆனால் கடந்த 3 மாதங்களாக வண்டிக்கான தவணை தொகையை செலுத்திய போதும், அது வங்கிக்கு போகவில்லை.. அதேநேரம் மூன்று மாதங்களாக வண்டிக்கான தவணையை வங்கியில் சர்வர் பிரச்சனை எனக்கூறி கலெக்சன் ஏஜெட் மணிவண்ணன் ஜி பேயில் பெற்றுள்ளார்.

வாகன கடன் இஎம்ஐ செலுத்தி வந்த நந்தகுமார், பணம் கட்டியதற்கான ரசீதினை கேட்ட போது மணிவண்ணன் தரவில்லையாம். பணம் கட்டியதற்கான ரசீது சர்வர் பிரச்சனை காரணமாக வரவில்லை என்று ஏஜெண்ட் மணிவண்ணன் தெரிவித்திருக்கிறார்.
இந்த சூழலில் வங்கி நிர்வாகம், நந்தகுமார் 3 மாத தவணையை செலுத்தவில்லை என்று கூறியதுடன், உடனே கட்டுமாறு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நந்தகுமார், தான் பணம் செலுத்தியதற்கான ஆதாரத்துடன் வங்கிக்கு சென்று பேசிய போது, வங்கியில் உள்ளவர்கள் அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். நந்தகுமார், தனியார் வங்கியின் கலெக்சன் ஏஜெண்ட் ஜிபேயில் அனுப்பிய ரசீது மற்றும் அவர் பேசிய ஆடியோ ஆகியவற்றை காட்டிய போதும் வங்கி நிர்வாகம் ஏற்கவில்லையாம். அங்கு போய் பாருங்கள்.. இங்கு போய் பாருங்கள் என்று அலைய விட்டார்களாம்.
ஒரு கட்டத்தில் வங்கி நிர்வாகம், ஏஜெண்டிடம் செலுத்திய பணத்துக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. 3 மாத தவணையை அபராதத்துடன் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். அத்துடன், வங்கியின் அதிகாரப்பூர்வ ஏஜெண்டான மணிவண்ணன் நந்தகுமாரை ஏமாற்றி பணத்தை எடுத்து சென்றதற்கு தாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது என்று வங்கி நிர்வாகம் கைவிரித்துள்ளது.
தான் வங்கியின் அதிகாரப்பூர்வ ஏஜெண்டான மணிவண்ணனுக்கு ஜிபே மூலம் அனுப்பிய பணத்திற்கு உரிய பதில் கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த நந்தகுமார். தனது உறவினர்களிடம் வங்கிக்கு வந்து அதிகாரிகளிடம் இதுபற்றி கேள்வி கேட்டுள்ளார். அதற்கு வங்கி நிர்வாக அதிகாரிகள், சென்னைக்கு சென்று தலைமை அலுவலகத்தில் புகார் அளிக்குமாறு கூறியிருக்கிறார்கள்.
இதனால் வெறுத்துப்போன வாடிக்கையாளர் நந்தகுமார், வங்கியின் ஷட்டரை இழுத்து போட்டு பூட்டி, வங்கிக்குள் ஊழியர்களை சிறைவைத்தார். இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார், நந்தகுமாரிடம் சமாதானம் செய்து, வங்கியை திறந்து ஊழியர்களை பத்திரமாக மீட்டார்கள்.
வங்கியின் அதிகாரப்பூர்வ ஏஜெண்டான மணிவண்ணன் நந்தகுமாரை ஏமாற்றி பணத்தை ஏமாற்றி சென்றதற்கு நீங்கள் தான் பொறுப்பு என்று கூறிய போலீசார், வங்கி அதிகாரிகள் இந்த விவாகரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். அதேநேரம் நந்தகுமாரை போலீஸ் நிலையம் வந்து புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினார்.












Click it and Unblock the Notifications