நீதி பெற்று தருவேன்.. கலங்காதே.. கொலையுண்ட முந்திரி ஆலை ஊழியரின் மகனிடம் பேசிய ராமதாஸ்.. உருக்கம்!
கடலூர்: கடலூரில் கொல்லப்பட்ட முந்திரி ஆலை ஊழியரின் மரணத்திற்கு கண்டிப்பாக நீதி பெற்றுத்தருவேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கோவிந்தராஜ் என்ற நபர் மர்ம மரணம் அடைந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திமுக எம்பி டிஆர்வி ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் இவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். எம்பி டிஆர்வி ரமேஷுக்கு சொந்தமான டிஆர்வி முந்திரி ஆலையில் கோவிந்தராஜ் கடந்த 6 வருடமாக பணியாற்றி வந்த நிலையில் நேற்று மரணம் அடைந்தார்.
வெறும் 24 மணி நேரம்தான்.. சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் நாக்பூரில் மீட்பு!
இந்த மரணம் தொடர்பாக திமுக எம்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமகவினர் போராடி வருகிறார்கள். போலீசார் இதில் உடனடியாக விசாரிக்க வேண்டும். உடலை மீண்டும் முறையாக பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மேல்மாம்பட்டு கிராமத்தில் பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பாமக நிறுவனர்
இது தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரிசையாக ட்வீட் செய்து திமுக எம்பி ரமேஷ் மீது புகார்களை அடுக்கி உள்ளார். இது தொடர்பாக அவர் செய்துள்ள ட்வீட்களில் கடலூர் எம்.பி. ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் கோவிந்தராசு என்ற தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், கடலூர் எம்.பி உள்ளிட்ட 5 பேர் மற்றும் பிறர் மீது சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
கொலை ஐயம்
கோவிந்தராசு கொலையில் உள்ள ஐயம் போக்கப்பட வேண்டும் என்பதாலும், இதில் சம்பந்தப்பட்டவர் அரசியல் செல்வாக்கு மிக்கவர் என்பதாலும் கோவிந்தராசுவின் உடற்கூறாய்வு தமிழகத்துக்கு வெளியே புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட வேண்டும், என்று ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். இவரின் பிரேத பரிசோதனையை வெளியே நடத்த வேண்டும் என்று பாமகவினர் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
கடலூர் எம்பி
கடலூர் எம்.பி. முந்திரி ஆலையில் கொல்லப்பட்ட தொழிலாளி கோவிந்தராசுவின் குடும்பத்திற்கு நீதி பெற்றுத் தராமல் நான் ஓய மாட்டேன். கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல் கலங்க வேண்டாம். கொடியவர்களின் தரப்பிலிருந்து வரும் அழுத்தங்களுக்கு அஞ்ச வேண்டாம்; பணிய வேண்டாம்!
ராமதாஸ் கோவை
கடலூர் எம்.பி முந்திரி ஆலையில் கொல்லப்பட்ட கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேலிடம் தொலைபேசியில் பேசினேன். உனக்கு கண்டிப்பாக நீதி பெற்று தருவேன்... கலங்காதே என உறுதியளித்தேன். இந்த விஷயத்தில் அய்யாவைத் தான் நம்பியிருக்கிறேன் என்றார் அந்த தம்பி அழுதபடியே. அவரது நம்பிக்கை வீண் போகாது!, என்று ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.