மக்களை கடனாளி ஆக்கிய திமுக.. ஆட்சிக்கு வந்து 100 ரூபாய் கூட தரவில்லை.. பிரச்சாரத்தில் ஓபிஎஸ் ஆவேசம்
கடலூர் : திமுகவை நம்பி 37 லட்சம் பேர் நகையை அடகு வைத்து கடனாளி ஆகி, இருந்த நகையையும் இழந்து விட்டனர் எனவும், மக்கள் அனைவரையும் கடனாளியாக ஆக்கிய பொறுப்பு திமுகவிற்கு இருக்கிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Recommended Video
கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, 6 நகராட்சி மற்றும் 14 பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் சார்பாக பொய்யான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது. அந்த வாக்குறுதிகள் அனைத்தும் செய்வார்கள் என மக்களை நம்ப வைத்தார்கள் அதனை நம்பி மக்களும் வாக்களித்தார்கள் என பேசினார்.
இன்னும் 4 வருஷம் ஆட்சி தொடர்வது திமுக கையில் இருக்கு.. கரூரில் பாஜக அண்ணாமலை பேச்சு
நீட் தேர்வு ரத்து
ஆனால் அவர்களால் மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. அதேபோன்று நீட் தேர்வை ஒரே கையெழுத்தில் ரத்து செய்வேன் என்று கூறினார். ஆனால் என்ன நடந்தது. இந்த நீட் தேர்வை முதன்முதலில் கொண்டு வந்தது 2010 ஆம் ஆண்டு காங்கிரஸ் திமுக ஆட்சியில்தான், நீட் தேர்வு முதன் முதலில் நடத்தப்படும் என அறிமுகப்படுத்தியது திமுக தான் என அவர் குற்றம் சாட்டினார். மேலும் நீட் தமிழகத்திற்கு வந்ததற்கு முழு பொறுப்பும் திமுக தான் அதை அனைத்தையும் மூடி மறைத்து கடந்த சட்டமன்ற தேர்தலில் நீட்டை வைத்து திமுக அரசியல் வியாபாரம் செய்து இன்று வசமாக மாட்டிக்கொண்டார். ஆட்சிக்கு வந்து 10 மாத காலம் ஆகிறது, ஆனால் இதுவரை நீட் ரத்து செய்ய முடியவில்லை,
கல்வி கடன்
தாய்மார்களுக்கு மாதம் 1000 ரூபாய் வங்கிக்கணக்கில் வந்து சேரும் என்றார் வந்ததா, மாணவர்களின் கல்வி கடன் ரத்து என்றார் செய்தார்களா? 5 பவுன் வரை கூட்டுறவு வங்கியில் அடகு வைத்தவர்களின் நகை உடனடியாக திருப்பி தரப்படும் என வாக்குறுதி சொன்னதோடு மட்டுமல்லாமல் ஸ்டாலினும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் வீதி வீதியாக சென்று கூட்டுறவு வங்கிக்கு சென்று 5 பவுன் நகையை அடகு வைக்க கூறினார்கள். மேலும் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக அனைத்தையும் ரத்து செய்கிறோம் என்று கூறினார்கள். இதை நம்பி 50 லட்சம் பேர் வீட்டில் இருந்த சிறிய நகை உட்பட அனைத்தையும் அடகு வைத்தார்கள். ஆனால் தேர்தல் முடிந்ததும் கூட்டுறவு வங்கியில் கடன் பெற்றவர்களில் தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் கடன் ரத்து என கணக்கு எடுக்கப்பட்டிருப்பதாக அறிவித்தனர். தற்போது 13 லட்சம் பேர் மட்டுமே தகுதி உள்ளவர்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடனாளி ஆன மக்கள்
ஆனால் இவர்களை நம்பி 37 லட்சம் பேர் நகையை அடகு வைத்து கடனாளி ஆகி இருந்த நகையையும் இழந்து விட்டனர். இவர்கள் அனைவரையும் கடனாளியாக ஆக்கிய பொறுப்பு திமுகவிற்கு இருக்கிறது. கடந்த ஆட்சியின் போது பொங்கல் பரிசுடன் 2500 ரூபாய் வழங்கப்பட்டது அப்போது ஸ்டாலின் 5 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என அறிக்கை விட்டு தற்போது வசமாக மாட்டிக் கொண்டார். மேலும் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து முதலமைச்சர் ஆனதும் நூறு ரூபாய் கூட கொடுக்கவில்லை என்று மக்கள் கேள்வி கேட்பதாக கூறினார். மேலும் 10 மாதத்திற்குள்ளாகவே திமுகவின் பகல் வேஷம் வெளிவந்துள்ளது.
கள்ள ஓட்டு போட முயற்சி
கள்ள ஓட்டு போடுவதிலும் தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களை மிரட்டுவதிலும் திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் செய்யும். அதேபோன்று தற்போது நடக்கவுள்ள தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் வாக்குச்சீட்டில் புகைப்படம் இல்லை இது எதற்கு என்றால் திமுக கள்ள ஓட்டு போடுவதற்கு. திமுக இந்த சதி வேலையை தேர்தல் தில்லு முல்லை அரங்கேற்றும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என குற்றம் சாட்டினார். மேலும் தேர்தல் கமிஷனினால் புகைப்படம் இல்லாத வாக்காளர் சீட்டு கொடுத்தால் வாங்க வேண்டாம். புகைப்படம் இல்லாத வாக்குச்சீட்டு திமுக எளிதில் கள்ள ஓட்டு போடுவதற்கு வழிவகை செய்யும் அது திமுகவிற்கு எளிய காரியம்", என ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.