ஆதினத்துக்கு ஒரு நீதி.. என்.எல்.சி.க்கு ஒரு நீதியா? அண்ணாமலைக்கு அதிமுக எம்.எல்.ஏ.கேள்வி!
கடலூர்: ஆதினங்களில் ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக நிற்கும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, என்.எல்.சி.யில் தமிழக இளைஞர்கள் புறக்கணிக்கப்படும் விவகாரத்தில் ஏன் தலையிட வில்லை என புவனகிரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அருண் மொழித்தேவன் வினவியுள்ளார்.
ஆதினத்துக்கு ஒரு நீதி.. என்.எல்.சி.க்கு ஒரு நீதியா? என அண்ணாமலைக்கு அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அருண் மொழித்தேவன் எம்.எல்.ஏ.வை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமியின் முக்கியத் தளபதிகளில் ஒருவர் என்பது கவனிக்கத்தக்கது.
என்.எல்.சி.யில் 299 வட இந்திய பொறியாளர்கள் தேர்வு! ஒரு தமிழரை கூட தேர்வு செய்யாத அவலம் -வேல்முருகன்
என்.எல்.சி. நிறுவனம்
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக இயங்கி வரும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இந்தியாவில் உள்ள மற்ற பொதுத்துறை நிறுவனங்களை விட சிறப்பாக செயல்பட்டு ‘நவரத்னா' தகுதியைப் பெற்று இருக்கின்றது. இதில் காலியாக இருந்த பொறியாளர் பணியிடங்களுக்கு 299 வட மாநில இளைஞர்கள் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால் ஒரு தமிழக இளைஞர் கூட தேர்வு செய்யப்படாதது தான்.
அரசியல் தலைவர்கள்
இந்த விவகாரம் தான் கடந்த மூன்று நாட்களாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது. வேல்முருகன், சீமான், சசிகலா, வைகோ, அன்புமணி ராமதாஸ் என தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித் தேவன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு சுளீர் கேள்வி ஒன்றை எழுப்பியிருக்கிறார்.
என்ன நீதி இது?
ஆதினத்துக்கு ஒரு பிரச்சனை என்றால் அங்கு முதல் ஆளாக போய் நிற்கும் அண்ணாமலை என்.எல்.சி. விவகாரத்தில் ஏன் தலையிடவில்லை என்றும் ஆதினத்துக்கு ஒரு நீதி.. என்.எல்.சி.க்கு ஒரு நீதியா? எனவும் அதிமுக எம்.எல்.ஏ. அருண்மொழித் தேவன் வினவியிருக்கிறார். பாஜகவும் அதிமுகவும் கூட்டணிக் கட்சிகள் என்கிற போதும் அண்ணாமலையை நோக்கி அதிமுக எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பியிருப்பது அரசியல் களத்தில் மிக முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது.
தேர்வில் சதி
இதனிடையே என்.எல்.சி. பொறியாளர் பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் மிகப்பெரும் சதி நடந்திருப்பதாக அதிமுக எம்.எல்.ஏ. அருண்மொழித் தேவன் பகீர் குற்றசாட்டை முன் வைத்திருக்கிறார். மத்தியில் பாஜக ஆட்சி நடப்பதால் என்.எல்.சி. விவகாரம் பற்றி மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அண்ணாமலைக்கு தான் உள்ளது என அதிமுக எம்.எல்.ஏ. கூறியிருக்கிறார்.
Recommended Video
திடீர் ஆவேசம்
சென்னை வந்த பிரதமர் மோடி எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் ஒதுக்காத நிலையில் அதிமுக எம்.எல்.ஏ. ஒருவர் இவ்வாறு சீறியிருப்பது கவனிக்கத்தக்கது. அதுமட்டுமல்லாமல் அருண் மொழித்தேவன் எம்.எல்.ஏ.வை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமியின் முக்கியத் தளபதிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.