புடவை கலர் பிடிக்கல.. எதார்த்தமாக பேசிய ஆதரவற்ற மூதாட்டி.. நெகிழ வைத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
கடலூர்: தீபாவளி பண்டிகையை பொறுத்தவரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கொண்டாடி மகிழ்கிறார்கள். பலர் புத்தாடை உடுத்தி, பட்டாசுகள் வெடித்து, கறி உள்ளிட்ட அசைவ விருந்துகளை உண்டு, உறவினர்களை சந்தித்து மகிழ்வார்கள். ஆனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடலூர் மாவட்டம் வடலூர் அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் இனிப்புகள், புத்தாடைகள், பட்டாசுகள் வழங்கி சாதாரணமாக சமத்துவ தீபாவளியை கொண்டாடியுள்ளார்.
தீபாவளி பண்டிகை நாளில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் வள்ளலார் முதியோர் காப்பகம் மற்றும் சிறார்கள் இல்லத்திற்கு சென்றார்.. அங்கிருந்த ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் ஆதரவற்ற சிறார்களுக்கு, புத்தாடைகள், பட்டாசுப் பெட்டிகள், இனிப்புப் பலகாரங்களை தன் கையாலேயே வழங்கி மகிழ்ந்தார்,

அப்போது ஒரு மூதாட்டிக்கு வழங்கப்பட்ட புடவை கலர் பிடிக்கவில்லை என தெரிகிறது. உடனே அந்த மூதாட்டி எனக்கு இந்த கலர் பிடிக்கவில்லை வேற வேண்டும் என்று கூற எதார்த்தமாக பேசினார். அவருக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சிரித்தபடி, மூதாட்டி கேட்டபடி வேறு கலரின் புடவையை மாற்றி கொடுத்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அதன்பிறகு மனநலம் பாதிக்கப்பட்டு எழுந்து நிற்க கூட முடியாதவர்களின் அருகில் அமர்ந்து, புத்தாடைககள் மற்றும் இனிப்புகளையும் வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து ஒரு பார்வையற்ற முதியோருக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புத்தாடை வழங்கினார். அப்போது அவர் தீபாவளி வாழ்த்து தெரிவித்த போது, "யார் வந்திருக்காங்க என்று கேட்டார். அதற்கு ரஜினி பொண்ணு வந்திருக்காங்க என்று அங்கிருந்தவர்கள் கூற, அதற்கு அவர் அப்படியா ஐஸ்வர்யா, சௌந்தர்யான்னு சொல்லுவாங்களே! அவங்களா வந்திருக்காங்க," என்று புன்னகைத்தபடி புத்தாடையை வாங்கிக்கொண்டு தீபாவளி வாழ்த்துக்களை பரிமாறினார்கள்.

இதேபோல் துறவி ஒருவருக்கு புத்தாடை வழங்கினார். அப்போது அந்த துறவி திடீரென கண்ணை மூடியபடி இறைவனை வேண்டிக்கொண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு திருநீறு போட்டுவிட்டு ஆசிர்வதித்தார். ஆதரவற்றோருக்கு மட்டுமின்றி, அந்த இல்லத்தில் பணிபுரிந்தவர்களுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புத்தாடை வழங்கி தீபாவளி வாழ்த்து கூறினார். அங்கிருந்த அனைவருமே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் கைகுலுக்கி, தீபாவளி வாழ்த்துக்களைப் பரிமாறினார்கள். கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் வள்ளலார் முதியோர் காப்பகத்தில் இருந்த ஆதரவற்றோருக்கு இந்த தீபாவளி மிக மகிழ்ச்சியான தீபாவளியாக அமைந்தது.












Click it and Unblock the Notifications